×

திருவெறும்பூர் அருகே துணிகரம் பெல் ஊழியர் வீட்டில் ரூ.1.50 லட்சம் கொள்ளை தீபாவளி புத்தாடைகளை அள்ளி சென்றனர்

திருவெறும்பூர்,அக்.9: திருவெறும்பூர் அருகே பெல் ஊழியர் வீட்டில் ரூ.1.50 லட்சம் ரொக்கம், தீபாவளிக்கு எடுத்த புத்தாடைகளையும் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி திருவெறும்பூர் அருகே வேங்கூர் செல்லும் சாலையில் உள்ள சிகேபிகார்டனில் வசிப்பவர் சுடலைமணி(40). பெல் நிறுவனத்தில் கிரேன் ஆபரேட்டராக வேலை பார்த்து வரும் இவர், கூத்தைப்பார் பகுதியில் மாட்டு பண்ணை அமைத்து தொழில் தொடங்குவதற்காக மனைவியின் நகைகளை அடகு வைத்து ரூ.5 லட்சம் பெற்றுள்ளார். அதில் அந்த வேலைக்கு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் செலவு செய்துவிட்டு வீட்டில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பணத்தை வைத்திருந்தார்.

மாட்டுப்பண்ணை அமைக்கும் இடத்தில் வேலை நடந்து வருவதால் அதனை பார்ப்பதற்காக நேற்றுமுன்தினம் மாலை குடும்பத்துடன் அங்கு சென்றவர் இரவில் அருகில் உள்ள உறவினர் வீட்டில் தங்கிவிட்டார். இந்நிலையில் நேற்று காலை சுடலைமணி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் உள்ள அனைத்து அலமாரிகளும் திறந்து கிடந்தது. பீரோவும் திறக்கப்பட்டு அதில் இருந்த ரூ.1லட்சத்து 52 ஆயிரம் ரொக்கம், கொலுசு, தீபாவளிக்கு எடுத்து வைத்திருந்த புத்தாடைகள் பேண்ட், சட்டை, சேலை, சுடிதார் மற்றும் மலேசியாவில் இருந்து வாங்கி வரப்பட்ட 5 வாட்சுகள், பூஜை அறையில் இருந்த ஸ்பீக்கர் உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.இது குறித்து சுடலைமணி கொடுத்த புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிந்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Tags : Diwali ,house ,Thiruverumbur ,Dungaram Bell ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்