×

உயர்மின் கோபுரத்திற்கு எதிரான போராட்டம் 5 விவசாயிகளின் காவல் 22ம் தேதி வரை நீட்டிப்பு

தாராபுரம்.அக்.10: விவசாய நிலங்களின் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய விவசாயிகளின் 5 பேரின் காவல் வரும் 22ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விவசாயிகள் மீது பொய் புகார் அளித்த தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க கோரி 14ம் தேதி கலெக்டரை நேரில் சந்தித்து மனு அளிக்க விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனம் சார்பில் திருப்பூர், ஈரோடு, கோவை, சேலம், உள்ளிட்ட 13 மாவட்ட விளைநிலங்களில் வழியாக கேரள மாநிலம் வரை உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்படவுள்ளது. இதற்காக விவசாய நிலங்களை மத்திய அரசின் பவர் கிரிட் நிறுவனம் கையகப்படுத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆகஸ்ட் 29ம்தேதி தாராபுரம் அருகே மேற்கு சடைய பாளையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர். ஈசன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் பொதுச் செயலாளர் முத்து விஸ்வநாதன், தலைவர் சண்முகம் உள்ளிட்ட 5 விவசாயிகளை போலீசார் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர். ஜாமீன் கோரி விவசாயிகள் தரப்பில் நேற்று தாராபுரம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். வழக்கறிஞர் ஈசன் உட்பட 5 பேரும் நீதிபதி சசிகுமார் முன் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில், நீதிபதி 22ம் தேதி வரை, ஐந்து பேருக்கும் காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார் இதன் பின் 5 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில் தாராபுரம் தனியார் மண்டபத்தில் போராட்டக் குழு விவசாயிகளின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நேற்று பிற்பகல் நடைபெற்றது.

இதில் பெண்கள் உள்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து தமிழ்நாடு விவசாய சங்க மாநில பொதுச் செயலாளர் சண்முகம் நிருபர்களிடம் கூறுகையில்: கடந்த 26 நாட்களுக்கு முன்னதாக மேற்குசடையபாளையத்தில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஒன்றிணைந்து தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்ததையடுத்து, போராட்டக்குழுவை சேர்ந்த 5 விவசாயிகளை தாராபுரம் தாசில்தார் அளித்த பொய் புகாரின்பேரில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இது தமிழக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை. விவசாயிகளை பழிவாங்குவது கண்டனத்துக்குரியது. போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் மீது பொய் புகார் கொடுத்த தாராபுரம் தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வருகின்ற 14ம் தேதி திருப்பூர் கலெக்டரிடம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து மனு கொடுக்க உள்ளோம். மனு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத பட்சத்தில் அன்றைய தினமே! தாராபுரம் தாசில்தாரை கண்டித்து தாலூகா அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : tower ,elite ,peasants ,
× RELATED என்னை நாடாளுமன்றத்துக்கு அனுப்பினால்...