×

விஜயதசமியில் அம்பு தொடுக்கும் விழா ஜமீன்தார் வம்சத்தினர் கொண்டாடினர்

அரியலூர்,அக்.10: அரசமரபினர் தங்களது வாரிசுகள் போர்கலைகளையும், கல்வியையும் கற்பிக்க விஜயதசமியன்று குருகுலத்திற்கு அனுப்புவார்கள். அக்குருகுலத்தில் அன்றையதினம் அவர்களுக்கு சுவாமியின் பாதத்தில் வில்அம்புகளை வைத்து பூஜைசெய்து பயிற்சியை தொடங்குவார்கள். இதனைநினைவுப்படுத்தும் வகையில் அரியலூர் ஜமீன்தார் வம்சத்தினர் நேற்று அவர்களது குலத்தெய்வமான ஒப்பில்லாதம்மன் ஆலயத்தில் விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் அம்மன் பாதத்தில் வைக்கப்பட்டு பூஜைசெய்த வில்அம்புகளை ஜமீன்தார் வாரிசுகளிடம் ஆகியோரிடம் கோயில் பூஜாரி வழங்கினார்.இதன்பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள வாழைமரத்தில் ஜமீன்தாரின் வாரிசுகள் வில்லில் இருந்து வாழைமரம் மீது அம்புகளை தொடுத்தனர்.

துர்க்கையம்மன் வன்னிமரத்தில் பதுங்கியிருந்த மகிஷாசுரனை போரிட்டு கொன்றநாளாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது. அதுபோல மகாபாரதத்தில் பாண்டவர்கள் வனவாசம் இருந்த காலத்தில் தங்களது ஆயுதங்கள் வன்னிமர பொந்தில் மறைத்து வைத்திருந்ததாகவும், பின்னர் விஜயதசமியன்று ஆயுதங்களை எடுத்து பூஜை செய்ததாகவும் புராணங்களில் கூறப்படுகிறது. விஜயதசமியில் அரசமரபினர் அம்பு தொடுக்கும் நிகழ்வுகுறித்து கம்பர் மங்களச் சொற்கள் விளங்கி நிற்பதும், இப்பழமையான பூவுலகத்தில் உயிர்கள் சிறப்புற்று வாழ்வதும், நான்குமறை வேதங்கள் ஒதப்படுவதும், அரசமரபினர் விஜயதசமி நாளில் மகிமை பொருந்திய தங்கள் வில்லினை தொட்டு பூஜை செய்து வில்வித்தை பயிற்சி தொடங்குதல்தான் என்று சிலைஎழுபதில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : shooting ,dynasty ,Vijayadasamy ,
× RELATED மசூதி மீது அம்பு விடுவது போன்ற சைகை...