×

மர்ம காய்ச்சலால் குழந்தை பலி எதிரொலி டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரம்

பெரும்புதூர், அக்.10: மர்ம காய்ச்சலால் சிறுமி பலியான சம்பவத்தை ெதாடர்ந்து பெரும்புதூர் பேரூராட்சியின் 15 வார்டுகளிலும் டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரமாகியுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் சுகாதார துறை சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையில், ஊராட்சியில் மழைநீர் தேங்கி கொசு தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் ஏராளமான மக்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.இந்நிலையில் பெரும்புதூர் பேரூராட்சி நுஸ்ரத் நகரில் மெகரின் பானு (8) என்ற சிறுமி, காய்ச்சல் ஏற்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்தாள். இதையடுத்து கலெக்டரின் உத்தரவுபடி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார் மேற்பார்வையில் பெரும்புதூர் பேரூராட்சி 15 வார்டுகளில், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நுஸ்ரத் நகர், திருமங்கையாழ்வார் தெரு ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் தொற்று நோய் மற்றும் காய்ச்சல் தடுப்பு முகாம் நடந்தது. அப்போது, தெருக்களில் கொசு மருந்து தெளித்து, துப்புரவு பணியாளர்கள் மூலம் குப்பை அகற்றப்பட்டு, கொசு ஒழிப்பு புகை அடிக்கப்பட்டது.
இதில்  பெரும்புதூர் பேரூராட்சி செயல் அலுவலர் தன்ராஜ், வட்டார சுகாதார மருத்துவ அலுவலர் அருண்குமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சீனிவாசன் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது, டெங்கு காய்ச்சல் ஏற்படாமல் இருக்க ஊராட்சிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குடிநீர் தொட்டிகள் பராமரிக்க வேண்டும். தினமும் கொசு மருந்து தெளிக்க வேண்டும். வீட்டை சுற்றி சுகாதாரமாக வைத்து கொள்ள வேண்டும் என பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Tags : dengue mosquitoes ,baby deaths ,
× RELATED டெங்கு கொசுவை ஒழிக்க நடவடிக்கை