ஆரல்வாய்மொழி, அக் 10: ஆபத்தான நிலையில் காட்சியளிக்கும் தோவாளை சானல் கரையை சீரமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தோவாளை, பண்டாரபரம் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. நாகர்கோவில் - தோவாளை தேசிய நெடுஞ்சாலையில் தோவாளையில் சானல் பாலம் பகுதியில் இருந்து சானல் ஓரமாக செல்கின்ற சாலை வழியாக பண்டாரபுரம் பகுதிக்கு செல்லலாம். இந்த சாலை வழியாக பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளை அழைத்து செல்லும் வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன. மேலும் கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களும் இந்த சாலை வழியாக சென்று வருகின்றன.
இந்நிலையில் பண்டாரபுரம் அருகே சானல்கரை உடைந்து அரிப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும் தற்போது இப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சானலில் தண்ணீரின் வரத்து அதிகமாக உள்ளது. இதனால் சாலையின் கீழ் பகுதியில் உள்ள மண்பகுதியில் அதிக அளவு அரிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் சானல்கரை வழியாக செல்லும் சாலை பலத்த சேதம் அடைந்து வருகிறது.
பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தும் இந்த சாலையில் இரவு நேரத்தில் மின் விளக்குகளும் இல்லாத நிலையில் இவ்வழியாக நடந்து வருகின்ற பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் சானலில் தவறி விழுந்துவிடக்கூடது என்ற அச்சத்துடன் வரும் சூழ்நிலை எழுந்துள்ளது.இந்த சாலையின் கீழ் பகுதியின் மண் அரிக்கப்பட்டு வருவதால் எப்போது வேண்டுமானாலும் சாலை முழுவதும் இடிந்து சானலில் விழும் நிலை உள்ளது. இதனால் இந்த பகுதி வழியாக வாகனங்களில் வருவோரும் ஒருவித அச்ச உண்ர்வுடனேயே வருகின்றனர்.சானலில் தொடர்ந்து தண்ணீர் வந்துகொண்டிருப்பதால் எப்போது வேண்டுமானாலும் இந்த சாலை துண்டிக்கப்படும் அபாய நிலைஉள்ளது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனே இந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து, விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.