×

திருவட்டார் அருகே 35 பவுன் திருட்டு கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறல் ராணுவ வீரரின் மனைவியிடம் தீவிர விசாரணை

குலசேகரம்,  அக். 10:  திருவட்டார்   அருகே ராணுவ வீரர் வீட்டில் நடந்த திருட்டில் கொள்ளையர்களை   கண்டுபிடிப்பதில் போலீசார் திணறி வருகின்றனர். தொடர்ந்து ராணுவ வீரரின்   மனைவியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவட்டாரை அடுத்த   மாத்தூர் தைவிளாகம் பகுதியை சேர்ந்தவர்  சிசில் (38). ராஜஸ்தான்   மாநிலத்தில் ராணுவ வீரராக உள்ளார். இவரது மனைவி  அஜிதா (35). இந்த  தம்பதிக்கு 2  ஆண் குழந்தைகள் உள்ளனர். தற்போது வீட்டில்  அஜிதாவும், 2  குழந்தைகளும் மட்டுமே  உள்ளனர். இந்த நிலையில் கடந்த 5ம்தேதி   முதல் தொடர் அரசு விடுமுறை என்பதால் அஜிதா வீட்டை பூட்டி விட்டு   குழந்தைகளுடன் வெள்ளிவிளாகம் பகுதியில் உள்ள  தாய் வீட்டுக்கு  சென்றுள்ளார். அங்கிருந்து நேற்று முன்தினம் மாலை வீடு  திரும்பினார். அப்போது  வீட்டின் படுக்கை அறை  சாவியை காணவில்லை. கதவை திறக்க முடியாததால்  பக்கத்தில் உள்ளவர்கள்  உதவியுடன் வேறு சாவி மூலம்  கதவை திறந்துள்ளனர்.

அப்போது  பீரோ திறந்து  கிடந்தது. உள்ளே இருந்த 35  பவுன் நகை, சுய உதவி குழுவில்  இருந்து வாங்கி  வைத்து இருந்த ரூ. 1  லட்சத்து 98 ஆயிரம் ஆகியவை  கொள்ளையடிக்கப்பட்டு  இருந்தன. வீட்டின்  பின்பக்க கதவின் பூட்டை உடைத்து  உள்ளே புகுந்த மர்ம  நபர்கள் நகை, பணத்தை  கொள்ளையடித்து விட்டு வீட்டில்  இருந்த மிளகாய் பொடியை  வீடு முழுவதும் வீசி  சென்று இருந்தது தெரிய  வந்தது. இதுகுறித்து அஜிதா  திருவட்டார் காவல்  நிலையத்தில் புகார்  செய்தார். இதையடுத்து தக்கலை ஏஎஸ்பி   விஜித் சாஸ்திரி  சம்பவ இடம் வந்து  விசாரணை நடத்தினார். மேலும் திருவட்டார்  போலீசார்,  தனிப்படை போலீசாரும்   சம்பவ இடம் வந்து விசாரித்தனர். போலீசாரின்  தொடர் விசாரணையில்  கொள்ளையர்கள் வீட்டின் பின்பக்க பூட்டை உடைத்து  நுழைந்ததற்கான அறிகுறிகள்  தென்படவில்லை.

அதுபோல் முன்பக்க கதவும்  உடைக்கப்படவில்லை.  தொடர்ந்து போலீசார் மாடிக்கு சென்று பார்த்தனர். அங்கும்  கதவு  உடைக்கப்படவில்லை. சமையல் அறையில் எக்ஸ்ஹாஸ்ட் பேன் வைக்கும் வழியாகவும்   கொள்ளையர்கள் வர வாய்ப்பில்லை. இப்படி இருக்க  வீட்டில் உள்ள அறை கதவு   சாவியும், பீரோ சாவியும் காணாமல் போனது எப்படி என்பதில் போலீசார்   குழப்பம் அடைந்துள்ளனர். அதுபோல் கைரேகை நிபுணர்கள் நடத்திய  சோதனையிலும்   கொள்ளையர்களின் கைரேகை எதுவும் சிக்கவில்லை. மோப்பநாய்  சோதனையில்,   நாய் வீட்டின் உள்ளேயும், வெளியேயும் சுற்றிவிட்டு பின்னர் அருகில் உள்ள   பரளியாறு வரை சென்றுவிட்டு திரும்பியது. இதனால் போலீசார் கொள்ளையர்களை   கண்டுபிடிப்பதில் திணறி வருகின்றனர். இதையடுத்து போலீசார்  ராணுவ வீரரின்   மனைவி அஜிதாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : soldier ,loot robbers ,Thiruvattar ,
× RELATED திருவட்டார் அருகே கல் ஏற்றி வந்த டெம்போ பறிமுதல்