திருக்கோவிலூர், அக். 10: திருக்கோவிலூர் பகுதியில் ஆபத்தான நிலையில் வைக்கப்பட்டுள்ள பேனர் விளம்பர பலகைகளால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியில் சிலர் தங்களின் வியாபாரத்தை அதிகரிப்பதற்காக, ஆபத்தான நிலையில் மின்சார கம்பத்தின் மீது வைத்துள்ள பேனர்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. சென்னையில் பேனரால் கடந்த மாதம் ஏற்பட்ட விபத்தில் பெண் பலியானதை தொடர்ந்து தமிழகத்தில் தற்போது பேனர் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.ஆனால் திருக்கோவிலூர் பகுதியில் வைக்கப்பட்டுள்ள பேனர் முறையாக அனுமதி பெற்று வைக்கப்பட்டுள்ளதா என சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் தற்போது திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காற்றுடன் மழை அவ்வப்போது பெய்து வருவதால் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடமான பேருந்து நிலையம் எதிரே மின் கம்பத்தின் மீது பேனர் வைத்துள்ளதால் அசம்பாவிதம் நிகழும் அபாயம் உள்ளது. எனவே காவல் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து பேனரை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.