×

100 சதவீத வாக்காளர் சரிபார்ப்பு

கடலூர், அக். 10: 2020 ஜனவரி 1ம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு, கடலூர் மாவட்டத்திலுள்ள 9 சட்டமன்ற தொகுதிகளின் 2020ம் ஆண்டு சிறப்பு சுருக்க முறை திருத்தம் செய்திடும் பணி கடந்த மாதம் 1ம் தேதி முதல் மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் பணித்துள்ளது. இதன்படி கடந்த மாதம் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை வாக்காளர்கள் தாமாக முன்வந்து வாக்காளர் பட்டியல் விவரங்களை சரிபார்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம் தற்போது வரும் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் வாக்காளர்கள் தாமாக முன்வந்து  தங்களது மற்றும் குடும்ப உறுப்பினர்களது வாக்காளர் பட்டியலிலுள்ள விவரங்களை வாக்காளர் உதவி மையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1950, வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகத்தில் இயங்கும் வாக்காளர் உதவி மையம் மற்றும் பொது சேவை மையங்கள் ஆகியவற்றின் மூலமாக சரிபார்த்து கொள்ளலாம்.

அவ்வாறு சரிபார்க்கும் போது விவரங்கள், புகைப்படம் ஆகியவற்றில் ஏதேனும் மாற்றம் செய்ய விரும்பினால் பின்வரும் ஆவணங்களின் அடிப்படையில் பொது சேவை மையங்கள் மூலம் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம் அல்லது சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரிடம் விண்ணப்பம் செய்து கொள்ளலாம்.கடலூர் மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்காளர் எண்ணிக்கை 20,70,740. இதில் இதுநாள் வரை 2,82,690 வாக்காளர்கள் மட்டுமே தங்களது வாக்காளர் அடையாள அட்டையிலுள்ள விவரங்களை சரிபார்த்துள்ளனர்.இதனை பொதுமக்கள் ஒரு நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு 100 சதவீத வாக்காளர் சரிபார்ப்பு என்ற இலக்கை எய்திட கடலூர் மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு அனைத்து வாக்காள பெருமக்களையும் கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது