×

ஆய்வு செய்ய தாய்மார்களுக்கு உரிமை 7 ஆண்டுகளாக தூங்கும் அன்னையர் குழு அரசாணை: மவுனம் சாதிக்கும் பள்ளிக்கல்வித்துறை

திருவள்ளூர், அக். 9: பள்ளியின் அடிப்படை கட்டமைப்பு, கற்பித்தல், ஆய்வக செயல்பாடுகள் குறித்து, சமூக ஆய்வு நடத்தவும், நிர்வாகத்தினரிடம் கேள்வி எழுப்பவும், தாய்மார்களுக்கு உரிமை இருப்பதாக அரசாணை வெளியிட்டு, 7 ஆண்டுகள் ஆகியும் அதனை நடைமுறைப்படுத்தாமல். பள்ளிக்கல்வித்துறை மவுனம் சாதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில், 56,828 அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி பள்ளிகள் உள்ளன. அனைத்து வகை பள்ளிகளிலும், பெற்றோர் ஆசிரியர் கழகம் செயல்படுகிறது. இதுதவிர, மாணவர்களின் தாய்மார்களை ஒருங்கிணைத்து, அன்னையர் குழு உருவாக்கி, சமூக ஆய்வு நடத்த பள்ளி நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என, கடந்த 2012 ல் அரசாணை (எண்: 270) வெளியிடப்பட்டுள்ளது.
இதில், சுயநிதி உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும், அரசு ஊழியர் அல்லாத, தாய்மார்கள் பார்வையிடலாம் என குறிப்பிட்டுள்ளது. இப்படியொரு அரசாணை வெளியிடப்பட்டதே, 99 சதவீதம் பெற்றோருக்குத் தெரியாது என்பதே யதார்த்த நிலை. அரசாணை வெளியாகி, 7 ஆண்டுகள் கடந்தும் இதுவரை எந்தப் பள்ளியிலும் அன்னையர் குழு அமைத்ததாகத் தகவல் இல்லை.

இதுகுறித்து, எந்தப் பள்ளி நிர்வாகமும் தகவல் தெரிவிப்பதுமில்லை. இந்த குழுவின் உரிமை குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது பள்ளிக் கல்வித்துறையின் பணி. ஆனால், இந்த அரசாணை குறித்து பல அதிகாரிகளுக்கே தெரிந்ததாகத் தெரியவில்லை. இதனால், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், பெற்றோர் - ஆசிரியர் கூட்டம் மட்டுமே நடத்தப்படுகிறது. தனிப்பட்ட முறையில் தாய்மார்கள் சென்று ஆய்வு செய்யவோ, கேள்வி கேட்கவோ எந்தப்பள்ளியும் அனுமதிப்பதில்லை. சில தனியார் பள்ளிகளில் அனுமதியின்றி பெற்றோர் வளாகத்திற்குள் வரக்கூடாது என்ற விதிமுறையே பின்பற்றப்படுகிறது. அரசாணைப்படி, வாரந்தோறும் குறிப்பிட்ட வேலை நாளில், வகுப்பு வாரியாக மாணவர்களின் தாய்மார்கள் பள்ளியை ஆய்வு செய்து அறிக்கை புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

அதேநேரத்தில், ஒருமுறை ஆய்வு செய்தவர்களே மறுமுறை பள்ளியை பார்வையிட கூடாது என்றும் இந்த அரசாணையின் விதிமுறை தெளிவுபடுத்துகிறது. உண்மையில் எந்தப் பள்ளி நிர்வாகமும் இதற்கு அனுமதிப்பதில்லை.
மிக மோசமான கழிப்பிடம், மைதானம், வகுப்பறை உள்ள பள்ளிகள் குறித்து குழந்தைகளிடமிருந்து புகார் வந்தாலும், அதை ஆய்வு செய்யும் உரிமை தாய்மார்களுக்கு இல்லை. இதற்கான அறிக்கை புத்தகமும் எந்தப் பள்ளியிலும் வைக்கப்படவில்லை. அதனால், இந்த அரசாணை கடந்த ஏழு ஆண்டுகளாக காகிதத்திலேயே கசங்கிக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து கல்வியாளர் ஒருவர் கூறுகையில், ‘’பள்ளியில் மாணவர்களை சேர்த்ததும் கடமை முடிந்ததாக பெற்றோர் கருதிவிடக்கூடாது. பள்ளியை ஆய்வு செய்யும் வாய்ப்பை தாய்மார்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். படித்த பெண்கள் முன் உதாரணமாக செயல்பட வேண்டும். பள்ளியில் நடக்கும் கூட்டங்களுக்கு முடிந்தவரை பெற்றோர் இருவரும் செல்ல முயற்சி செய்ய வேண்டும். இதற்கு வாய்ப்பளிக்காத கல்வி நிறுவனங்கள் குறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம்’’ என்றார்.

Tags : Mothers ,government Govt ,
× RELATED போராட்டங்களைப் பார்த்தே வளர்ந்தேன்…கண்ணகி (NFIW)