திருமயம், அக்.9: அரிமளம் ராயவரத்தில் நவராத்திரி விழாவையொட்டி நடைபெற்ற அம்புவிடும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் வருடம் தோறும் நவராத்திரி விழாவை முன்னிட்டு அம்புவிடும் நிகழ்ச்சி நடத்துவது வழக்கம். இந்நிலையில் நேற்று மாலை நவராத்திரி விழாவை முன்னிட்டு அய்யனார், சுப்பிரமணியன்-வள்ளி-தெய்வானை, சவுந்தரராஜபெருமாள், மாரியம்மன், பாலுடைய அய்யனார் உள்ளிட்ட கோயில் சிலைகளை பூ மாலையால் அலங்கரித்து பக்தர்கள் மாட்டு வண்டி வாகனத்திலும், தோளிலும் தூக்கி கொண்டு ஊர்வலமாக வந்தனர். இதனை காண அரிமளம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் விளங்கி அம்மன் கோயில் அருகே மகர்நோன்பு திடலில் கூடியிருந்தனர். அதனை தொடர்ந்து மேலே குறிப்பிட்ட சிலைகள் அனைத்தும் மகர்நோன்பு திடலுக்கு வந்தது. பின்னர் ஒவ்வொரு சிலை இருந்த வாகனத்திலும் அரிச்சகர் வில்லில் அம்பை வைத்து பக்தர்களை நோக்கி எய்தார்.
இந்த அம்பை கடவுளிடம் இருந்து வரும் அம்பாக பக்தர்கள் நினைத்து இதனை எடுக்கும் பக்தர் வீட்டில் சுப காரியம் நடந்து, நோய், பினி அகன்று, விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கையில் அம்பை எடுக்க பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டு சென்றனர். இவ்வாறாக 40 அம்புகளுக்கு மேல் விடப்பட்டது. இதனை தொடர்ந்து தீபாரதனை நிகழ்ச்சி நடந்தது. பின்னர் மீண்டும் வாகனம் மூலம் சிலைகள் கோயிலுக்கு புறப்பட்டு சென்றது. இதே போல் கீழப்பனையூர் காமாட்சி அம்மன் வையாபுரிபட்டி மகர் நோன்பு திடலிலும், ஆயிங்குடி மலைக்கொழுந்தீஸ்வரர், ராயவரம் சிவன் கோயில், மடத்துப்பள்ளி முருகன் கோயில் ராயவரம் சந்தைப்பேட்டை திடலிலும், கடியாபட்டி சிவன் கோயில் சந்தை பேட்டை திடலிலும் அம்பு விடும் நிகழ்ச்சி நடந்தது. இதை காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்திருந்து தாpசனம் பெற்றுச் சென்றனர்.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வீடுகள் மற்றும் கோயில்களில் கொலு பொம்மைகள் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். நவராத்திரி நிறைவு விழாவை முன்னிட்டு நேற்று புதுக்கோட்டை கீழராஜவீதியில் உள்ள சாந்தநாதசுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து வேதநாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் உள்ள பிரகதாம்பாள் கோவில், நார்த்தாமலை சிவன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் நவராத்திரி விழாவின் நிறைவு நாளையொட்டி அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.