×

மயிலாடுதுறையில் ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் 12 பவுன் நகை நூதன மோசடி

மயிலாடுதுறை, அக்.9: மயிலாடுதுறையில் ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் 12 பவுன் நகையை நூதன மோசடி செய்த டிப்டாப் ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள திருவெண்காட்டில் வசித்து வருபவர் சதாசிவம் மனைவி பேபி (70). ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர் தனியாக கடந்த வாரம் மயிலாடுதுறைக்கு வந்துள்ளார். தலைமை தபால் அலுவலகத்தை ஒட்டிசெல்லும் சாலையில் நின்று எதிரே உள்ள ஓட்டலுக்கு செல்ல காத்திருந்தார். அப்போது டிப்டாப்பாக வந்த ஒரு நபர், நான் போலீஸ் உங்களை அய்யா கூப்பிடுகிறார் என்றார். அருகில் சென்றபோது அங்கிருந்த 3 நபர்கள், இந்த இடத்தில் ஒரு கொலை நடந்துள்ளது. ஆகவே இந்த இடத்தில் நகைகளை போடக்கூடாது, அப்படி போட்டிருந்தால் அபராதம் விதிப்பார்கள் கழட்டி பையில் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர்.

அப்போது அருகில் நின்ற ஒருவர் தான் அணிந்திருந்த செயினை கழட்டி தன் பைக்குள் வைத்தார். இதை கண்ட பேபி உடனே தன் கழுத்தில் கிடந்த தாலிச்செயினுடன் கூடிய 8.5 பவுன் நகையை கழட்டி பர்சில் வைத்தார். 2 பவுன் வளையல், மோதிரம் என 12 பவுன் நகைகளை அனைத்தையும் கழட்டி பர்சில் வைத்து கையில் வைத்திருந்த பையில் வைத்தார். அதில் கருகமணியையும் சேர்த்து வைத்துள்ளார். ஒரு நபர் அந்த பையை வாங்கி பார்த்துவிட்டு அவரிடமே திருப்பி கொடுத்து விட்டார். அவர்களிடமிருந்து பையை வாங்கியதும் எதிரே உள்ள ஓட்டலுக்குள் சென்று உணவருந்திவிட்டு பையை திறந்து பார்த்தபோது கருகமணி மட்டுமே இருந்துள்ளது. 12 பவுனைக் கழட்டி வைத்திருந்த பர்சை காணவில்லை. உடனே வெளியில் வந்து பார்த்தபோது அந்த 4 நபர்களும் மாயமாகியிருந்தனர். அப்போது அவருக்கு மயக்கம் ஏற்பட்டது.

அவரை உடனே அங்கிருந்தவர்கள் சமாதனம் செய்து ஊருக்கு அனுப்பி வைத்தனர். அங்கே சென்று இத்தனை நாட்களாக வைத்தியம் பார்த்துள்ளார், சகஜ நிலைமைக்குத் திரும்பியதும் நேற்று முன்தினம் மயிலாடுதுறை காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மயிலாடுதுறை நகரில் சிசிடிவி கேமராக்கள் நீக்க மறைநிறைந்துள்ளதால் இதுபோன்ற திருட்டுக்களும் குற்றங்களுக்கும் ஆதாரம் சிக்கி விடுகிறது. ஆகவே கச்சேரி சாலையில் பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்கள் சுழன்றபடி உள்ளதால் அதன் பதிவுகளை வைத்து மயிலாடுதுறை போலீசார் தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர்.

Tags : teacher ,Mayiladuthurai ,
× RELATED கல்லூரி மாணவர்களின் வாக்காளர்...