கன்னியாகுமரி, அக்.9: கன்னியாகுமரியில் நவராத்திரி விழாவில் நேற்று பகவதியம்மன் பரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் புரட்டாசி மாதம் 10 நாட்கள் நவராத்திரி திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா கடந்த 29ம் தேதி தொடங்கி நேற்று வரை 10 நாட்கள் நடந்தது. 10ம் திருவிழாவான நேற்று பரிவேட்டை நடந்தது. அதிகாலை 4.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8 மணிக்கு அம்மன் அலங்கார மண்டபத்தில் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பகல் 12 மணிக்கு அம்மன் எலுமிச்சம்பழம் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி பரிவேட்டைக்காக மகாதானபுரம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோயிலில் இருந்து அம்மன் வாகனம் வெளியே வரும் போது கோயில் நுழைவாசலில் துப்பாக்கி ஏந்திய போலீசாரின் அணிவகுப்பு மரியாதை நடந்தது.கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் பக்தர்கள் சார்பில் நெற்றிப்பட்டம் அணிவிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்ட 3 யானைகளின் மீது பக்தர்கள் முத்துக்குடை பிடித்தபடியும், பகவதிஅம்மன் உருவபடத்தை தாங்கியபடியும் அணிவகுத்து சென்றனர். அதைதொடர்ந்து 3 குதிரைகளில் பக்தர்கள் வேடம் அணிந்து சென்றனர்.
மேலும் இந்த ஊர்வலத்தில் நையாண்டிமேளம், கரகாட்டம், காவடி ஆட்டம், பொய்க்கால்குதிரை ஆட்டம், பொம்மலாட்டம், கடுவாய்ப்புலி ஆட்டம், செண்டை மேளம், தப்பாட்டம், மயிலாட்டம், குயிலாட்டம், பேண்டு வாத்தியம், நாதசுவரம், பஞ்சவாத்தியம், பறை ஆட்டம், தையம் ஆட்டம், சிங்காரி மேளம், பூக்காவடி, அம்மன் வேடம் அணிந்த பக்தர்களின் நடனம் போன்றவைகளும் இடம் பெற்றன.
வழி நெடுகிலும் பக்தர்கள் அம்மனுக்கு எலுமிச்சம்பழம் மாலைகள் அணிவித்து தேங்காய், பழம் படைத்து திருக்கணம் சாத்தி வழிபட்டனர். ஊர்வலம் சன்னதி தெரு, ரதவீதிகள், வடக்கு தெரு, மெயின்ரோடு, விவேகானந்தபுரம் சந்திப்பு, மகாதானபுரம் தங்கநாற்கர சாலை ரவுண்டானா சந்திப்பு வழியாக மாலை 6 மணிக்கு மகாதானபுரம் வேட்டை மண்டபத்தை சென்று அடைந்தது. அங்கு அம்மன் பாணாசுரன் என்ற அரக்கனை வேட்டையாடி வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து வாண வேடிக்கை நடந்தது. பின்னர் மகாதானபுரம், பஞ்சலிங்கபுரம் ஆகிய கிராமங்களில் அம்மன் பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது. அதைத் தொடர்ந்து அம்மன் காரியக்கார மடத்துக்கு சென்று வெள்ளி பல்லக்கில் கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 10 மணிக்கு அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி, பின்னர் வருடத்திற்கு 5 விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அம்மன் கோயிலுக்குள் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. பரிவேட்டை திருவிழாவையொட்டி கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. பாஸ்கரன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நாகர்கோவில் மற்றும் அஞ்சுகிராமத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.