×

பழநி நகராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ

பழநி, அக்.9: பழநி நகராட்சி குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.9 லட்சம் மதிப்பிலான தரம்பிரிக்கும் இயந்திரம் எரிந்து நாசமானது. பழநி நகரில் 33 வார்டுகள் உள்ளன. சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் தண்டாயுதபாணி சுவாமி கோயில் இந்நகரில் உள்ளது. இதன் காரணமாக கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களாலும் அதிக அளவில் குப்பை சேகரமாகிறது. இங்கு சேகரமாகும் குப்பைகள் பெரியப்பா நகரில் உள்ள நகராட்சி குப்பைக்கிடங்கில் கொட்டப்படுகின்றன. இங்கு கொட்டப்படும் குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரித்தல், இயற்கை உரம் தயாரித்தல் போன்ற பணிகள் நடந்து வருகின்றன.

குப்பைகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை தனியாக பிரித்து தரம்பிரிக்க குப்பைக்கிடங்கில் பேக்கிங் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குப்பைக்கிடங்கில் திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென பற்றி எரிய துவங்கியது. இதுகுறித்து பழநி தீயணைப்புப்படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப்படையினர் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இத்தீவிபத்தில் குப்பைக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த ரூ.9 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்களை தரம் பிரிக்கும் இயந்திரம் எரிந்து நாசமாயின. இதுகுறித்து பழநி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : garbage warehouse ,Palani ,
× RELATED சென்னை பரங்கிமலை கன்டோன்மென்ட்...