குன்னூர், அக். 9: குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் சுற்றுலா பயணிகள் வீசிச்செல்லும் பிளாஸ்டிக் பொருட்களால் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் வாகனத்தில் பயணிக்கும்போது தாங்கள் கொண்டு வரக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை வீசி செல்கின்றனர். மாவட்ட நிர்வாகம், வனத்துறை சார்பில் குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சுற்றுலா பயணிகள் வன விலங்குகளுக்கு உணவளித்து வருகின்றனர்.
மேலும் உணவு பொருட்களை பிளாஸ்டிக் பைகளுடன் வீசி செல்வதால் அவற்றை உண்ணும் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் பிளாஸ்டிக் பொருட்களை மாவட்டத்திற்குள் கொண்டு வர தடை விதித்துள்ளது. பர்லியார், கல்லார் உள்ளிட்ட பகுதியில் வாகனங்கள் பலத்த சோதனைக்கு பிறகே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், தற்போது குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அதிகளவில் பிளாஸ்டிக் பொருட்கள் காணப்படுகிறது. எனவே வாகனங்களை முறையாக சோதனை மேற்கொள்ள வேண்டும் என வன விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.