×

தொடர் விடுமுறை நிறைவு சுற்றுலா பயணிகள் ஊர் திரும்புகின்றனர்

ஊட்டி, அக். 9: ஆயுத பூஜை  தொடர் விடுமுறை முடிந்த நிலையில் சொந்த ஊர்களுக்கு சுற்றுலா பயணிகள் திரும்ப துவங்கியுள்ளனர். ஊட்டிக்கு  நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்ததாலும், அரசு விடுமுறை  நாட்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். கடந்த 10  நாட்களாக பெரும்பாலான பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை, ஆயுத பூஜை விடுமுறை  மற்றும் வார விடுமுறை என தொடர் விடுமுறை வந்த நிலையில், ஊட்டியில் ஏராளமான  சுற்றுலா பயணிகள் முகாமிட்டிருந்தனர். சுற்றுலா பயணிகள் கூட்டத்தால்  ஊட்டியில் உள்ள அனைத்து லாட்ஜ் மற்றும் காட்டேஜ்கள் நிரம்பி வழிந்தன.  அனைத்து சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

சுற்றுலா  பயணிகள் வாகனங்களால் கமர்சியல் சாலை, சேரிங்கிராஸ் சாலை, பூங்கா சாலைகளில்  சுற்றுலா பயணிகள் வாகனத்தால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  இந்த நிலையில், விடுமுறை முடிந்து நேற்று சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, வெளி  மாவட்டங்களில் பணியாற்றும் நீலகிரி மக்களும் ஊர் திரும்ப  துவங்கினர். இதனால், ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் நேற்று காலை முதலே பயணிகள் கூட்டம் அலைமோதியது. கோவை, மேட்டுப்பாளையம், ஈரோடு, திருப்பூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட வெளி  மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பஸ்களில் கூட்டம் அலைமோதியது. அதேபோல்,  கர்நாடக மாநிலம் செல்லும் பஸ்களிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக  காணப்பட்டது. நெரிசலை தவிர்க்க ஊட்டி அரசு போக்குவரத்து கழகம் நேற்று வெளி  மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்களை இயக்கியது.

ஊட்டியில்  இருந்து கோவை, மேட்டுப்பாளையம், திருச்சி, மதுரை ஆகிய பகுதிகளுக்கு சிறப்பு  பஸ்கள் இயக்கப்பட்டன. எனினும், வெளியூர் செல்லும் அனைத்து பஸ்களுமே பயணிகள்  கூட்டதால் நிரம்பி வழிந்தன. பஸ் ஏறும்போது தள்ளுமுள்ளு  ஏற்படாமல் இருக்க பயணிகள் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன்  பஸ்களில் ஏற்றப்பட்டனர். வெளியூர் செல்லும் சுற்றுலா பயணிகள் கூட்டம்  இருந்தால், இன்றும் சிறப்பு பஸ்களை இயக்க போக்குவரத்து கழகம் முடிவு  செய்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் தசரா பண்டிகை விடுமுறை என்பதால்,  கர்நாடகாவில் இருந்து ஊட்டிக்கு அந்த மாநில போக்குவரத்து கழகமும் சிறப்பு  பஸ்களை இயக்கியது குறிப்பிடத்தக்கது.

Tags : city ,holidays ,
× RELATED சினிமா ஸ்டண்ட் நடிகர் வீட்டில் திருட்டு