ஆலந்தூர், அக். 9: இந்தியாவிற்கு வருகை தரும் சீன அதிபர் ஜின்பிங், சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார். இதனையொட்டி அந்த ஒட்டலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இங்கு தங்கியிருப்போர் மற்றும் வருகை தருவோர் அனைவரும் போலீசாரின் தீவிர கண்காணிப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 3 தினங்களுக்கு முன் இந்த ஒட்டலில் உள்ள மதுபான பாருக்கு நைஜீரியாவை சேர்ந்த சீண்டூ லிவீயாஸ் (33) என்பவர் வந்து சென்றுள்ளார். விசாரணையில் அந்த நபர் பள்ளிக்கரணையில் தங்கியிருப்பதாக கூறியுள்ளார். ஆனால் இந்தியாவிற்கு வந்த காரணத்தை கூறவில்லை. அவரிடம் பாஸ்போர்ட், வாகனத்தை பறிமுதல் செயத போலீசார், அழைக்கும்போது விசாரணைக்கு வருமாறு கூறி அனுப்பிவிட்டனர் ஆனால் அந்த வாலிபர் விசாரணைக்கு வரவில்லை. இதையடுத்து கூறியபடி பள்ளிக்கரணைக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தியபோது, அங்கு அவர் இல்லை. மாயமான அவரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.