மணப்பாறை, அக்.4: மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட சாலையோர கடைகளில் நகராட்சி ஊழியர்கள் ஆய்வு என்ற பெயரில் கறார் வசூலில் ஈடுபடுவதாக வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். மணப்பாறை பஸ் நிலையம் எதிரே உள்ள கடைகள், மதுரை ரோடு, கோவில்பட்டி ரோடு, விராலிமலை ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருக்கும் டீக்கடை, ஓட்டல்கள், இரவு நேர சிற்றுண்டிகள் போன்ற கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு, உணவு மற்றும் திண்பண்டங்களின் தரம் குறித்து நகராட்சி ஊழியர்களால் அவ்வப்போது ஆய்வு செய்யப்படுகிறது அப்போது அந்தந்த கடைகளில் ஏற்படும் குறைபாடுகளை சுட்டிக்காட்டி இந்த குறைபாடுகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க எங்களை கவனிக்க வேண்டும் எனக்கூறி வசூல் வேட்டைகளில் ஈடுபடுவதாகவும், அப்படி கவனிக்கத் தவறும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் வியாபாரிகள் தரப்பில் புகார் தெரிவிக்கின்றனர். இது குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், மணப்பாறை நகராட்சி பகுதிகளில் ஆய்வு என்ற பெயரில் நகராட்சி ஊழியர்கள் நடத்தும் வசூல் வேட்டை எங்களை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கி வருகிறது. எனவே இதுகுறித்து அதிகாரிகள் இதுபோன்ற செயலில் ஈடுபடும் நகராட்சி ஊழியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சாலையோர கடை வியாபாரிகள் எதிர்பார்ப்பாக உள்ளது என தெரிவித்தார்.