×

45 குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்

ஈரோடு, அக். 4: ஈரோடு மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் நடைபெறுவதை தடுக்க மாவட்ட சமூக நலத்துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, மலைப்பகுதியான அந்தியூர், பர்கூர், சத்தியமங்கலம், தாளவாடி, கடம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் குழந்தை திருமணங்கள் தொடர்பாக மலைவாழ் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட சமூக நலத்துறையும் குழந்தை திருமணங்கள் நடப்பது குறித்து தகவல் கிடைத்தால் உடனடியாக அங்கு சென்று குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தி அவர்களுக்கு உரிய கவுன்சிலிங் கொடுத்து வருகின்றனர். நடப்பாண்டில் மாவட்ட சமூகநல துறைக்கு குழந்தை திருமணங்கள் நடப்பதாக 45 புகார்கள் வந்தது. இதையடுத்து, அங்கு சென்ற அதிகாரிகள் 45 குழந்தை திருமணங்களை தடுத்தி நிறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட சமூக நல அலுவலர் பூங்கோதை கூறியதாவது: நடப்பாண்டில் 45 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. குழந்தை திருமணத்தின்போது இருதரப்பை சேர்ந்த பெற்றோர்களை அழைத்து திருமண வயது பெண்களுக்கு 18 வயதும், ஆண்களுக்கு 21 வயதும் இருக்க வேண்டும். அவர்களுக்கு உரிய வயது வந்த பிறகு திருமணம் செய்து வைக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகிறோம்.  குழந்தை திருமணங்கள் பெரும்பாலும் வேலை செய்யும் இடத்தில் ஏற்படும் பழக்கம், உறவுகளுக்குள் திருமணம் போன்றவற்றால் ஏற்படுகிறது. குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அவர்களுக்கு எடுத்துரைத்து வருகிறோம். மாவட்ட சமூக நலத்துறை சார்பில் முதியோர்களை பராமரிப்பது தொடர்பாகவும் கவுன்சலிங் அளித்து வருகிறோம். இவ்வாறு பூங்கோதை கூறினார்.

Tags :
× RELATED நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி...