ஈரோடு, அக். 4: ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை உடனடியாக நடத்த வலியுறுத்தி ஈரோட்டில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க கிளை செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். சிஐடியு மத்திய சங்க செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தார். இதில், போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை காலம் தாழ்த்தாமல் உடனடியாக நடத்த வேண்டும். மற்ற துறைகளைக் காட்டிலும் மிக அத்தியாவசிய துறையான போக்குவரத்து துறையில் கூடுதல் வேலைபளு இருப்பதால், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு, எல்பிஎப் (தொமுச), ஏஐடியுசி, ஐஎன்டியுசி, எச்எம்எஸ் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.