இளம்பிள்ளை, அக்.4: இடங்கணசாலை பேரூராட்சியில் குப்பை கிடங்கு திடீரென தீப்பற்றி எரிந்தது. தீயை அணைக்க முயன்ற போது பொதுமக்களுக்கும், பேரூராட்சி பணியாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இளம்பிள்ளை அருகே உள்ள இடங்கணசாலை பேரூராட்சிக்கு உட்பட்ட கே.கே.நகர்கஞ்சமலையூர் பகுதியில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை, மக்கா குப்பை பிரித்தெடுக்கும் கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. அவ்வழியே சென்றவர்கள் பேரூராட்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பின் பணியாளர்கள் தீயை அணைக்க முயற்சித்தனர். அப்போது அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஓன்று திரண்டு வந்து, இந்த இடத்தில் குப்பைகளை கொட்டி எரிக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கும், பணியாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் பணியாளர்கள் டிராக்டர் மூலம் தண்ணீர் கொண்டு தீயை அணைக்க முயற்சித்தனர். அப்போது அப்பகுதி மக்கள் தீயை அணைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சுமார் 5 மணி நேரம் தீப்பிடித்து எரிந்தது. இதனை அடுத்து காவல் துறைக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. மகுடஞ்சாவடி போலீசார் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின் சங்ககிரி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.