சிவகாசி, அக். 4: தங்கம் விலை உயர்ந்த போதிலும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிடவில்லை என்று பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகிய மூன்று இடங்களில் கலெக்டர் சிவஞானம் தலைமையில் நிதி உதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா நடைபெற்றது. 3,015 பயனாளிகளுக்கு 20 கோடியே 68 லட்சத்து 91 ஆயிரத்து 240 மதிப்பிலான திருமண உதவியுடன் தாலிக்கு தங்கத்தை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார். சிவகாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் பேசும்போது, ஜெயலலிதா கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் தமிழக முதல்வர் எடப்பாடியார் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றார். தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே சென்ற போதிலும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிடவில்லை. தங்கத்தை வெட்டி எடுக்கும் பெல்சியம் நாட்டில் கூட தங்கம் ஓசியாக வழங்கப்படவில்லை. தமிழகத்தில் ஏழை பெண்கள் பயன்பெறும் வகையில் தாலிக்க தங்கம் விலையில்லாமல் வழங்கப்படுகின்றது. தமிழகத்தில் ஏராளமான அரசு கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளதால் பெண்கள் உயர்கல்வி படித்து வருவதும் அதிகரித்துள்ளது. ஏழைகளுக்கான திட்டங்யல்களை செயல்படுத்துவதில் எடப்பாடியார் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது என்று பேசினார். விழாவில் சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன், திருவில்லிபுத்தூர் எம்எல்ஏ சந்திரபிரபா, அதிமுக ஒன்றிய செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, வேண்டுராயபுரம் சுப்பிரமணியன், எதிர்கோட்டை மணிகண்டன், ராமராஜ்பாண்டியன், மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் கணேசன், திருத்தங்கல் நகர செயலாளர் பொன்சக்திவேல் மற்றும் நிர்வாகிகள் சிங்கராஜ், யுவராஜ், வேண்டுராயபுரம் காளிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.