×

வேலூரில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து எஸ்.ஐ. வீட்டில் 8 சவரன் நகை, பணம் திருட்டு மர்ம நபர்கள் கைவரிசை

வேலூர், அக்.4: ஓய்வு பெற்ற எஸ்ஐ வீட்டின் கதவை உடைத்து 8 சவரன் நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.வேலூர் தொரப்பாடி ஆர்.வி.நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(66), ஓய்வு பெற்ற எஸ்.ஐ. தற்போது சென்னையில் தனியார் கல்லூரி வார்டனாக பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் திருமணமாகி ஐதராபாத்தில் உள்ள அவரது மகளை பார்ப்பதற்காக ராதாகிருஷ்ணனும், அவரது மனைவியும் வீட்டை பூட்டிவிட்டு கடந்த 27ம் தேதி சென்றுள்ளனர்.பின்னர் மனைவி, மகளை ஐதராபாத்திலேயே விட்டுவிட்டு, இவர் சென்னையில் பணிக்கு திரும்பினார். இதற்கிடையே மனைவியும், மகளும் கடந்த 1ம் தேதி தொரப்பாடியில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. அறைக்கு சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த துணிகள் சிதறிக்கிடந்தது.இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், நகைகளை சரிபார்த்தபோது 8 சவரன் நகை மற்றும் ₹15 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து சென்னையில் உள்ள ராதாகிருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து வேலூர் வந்த ராதாகிருஷ்ணன், இதுகுறித்து பாகாயம் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார்.அதன்பேரில் எஸ்.ஐ., சாந்தகுமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணம் திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Tags : SI ,house ,Vellore ,jewelery ,
× RELATED போதையில் நண்பர்களுடன் எஸ்ஐயை தாக்கிய விஏஓ