×

அரியலூர் மாவட்டத்தில் 14ம் தேதி முதல் 21 நாட்களுக்கு கோமாரிநோய் தடுப்பூசி முகாம்

அரியலூர், அக். 4: அரியலூர் மாவட்டத்தில் வரும் 14ம் தேதி முதல் 21 நாட்களுக்கு கோமாரிநோய் தடுப்பூசி முகாம் நடக்கிறது. இதில் பயன்பெற கால்நடை வளர்ப்போருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அரியலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் நல்லமுறையில் கால்நடைகளை பேணி காத்து வளர்த்து வருகிறார்கள். கால்நடைகளை தாக்கும் முக்கிய நோய்களில் ஒன்று கால் மற்றும் வாய்நோய் என்கிற கோமாரி நோய். இந்நோய் மிக கொடிய வைரஸ் கிருமிகளால் பரவுகிறது. மழை காலத்திலும், பனி காலத்திலும் இக்கிருமியானது தண்ணீர் மூலமாகவும், காற்றின் மூலமாகவும் மிக விரைவில் பரவக்கூடியது.இந்நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் வாயிலும், நாக்கிலும், கால் குளம்புகளுக்கு இடையிலும் புண்கள் ஏற்படும். அவைகள் தீனி உட்கொள்ள முடியாமல் மிகவும் பாதிக்கப்படும், மிகவும் மெலிந்துவிடும்.வெயில் காலத்தில் நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு மூச்சிறைக்கும். தோலின் தன்மை கடினமாகவும், அடர்த்தியான ரோமமும் காணப்படும். பால் கறவை முற்றிலும் குறைந்து விடும். கறவை பசுக்களில் பால் குடித்து வரும் கன்றுகள் உடனடியாக இறந்து விடும், மலட்டுத்தன்மை ஏற்படும். கால்நடை வளர்ப்போருக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்படும்.

எனவே இந்நோய் தாக்காவண்ணம் இருப்பதற்கு மாடுகளுக்கு ஆண்டுக்கு இருமுறை தடுப்பூசி பணி மேற்கொள்வது ஒன்றே சிறந்த நிவாரணம். அரியலூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையால் கால் மற்றும் வாய்நோய் தடுப்பு திட்டம் 17வது சுற்றின் கீழ் வரும் 14ம் தேதி முதல் 21 நாட்களுக்கு கோமாரிநோய் தடுப்பூசி முகாம் நடக்கிறது. எனவே கால்நடை வளர்ப்போர் தங்கள் கிராமத்துக்கு தடுப்பூசி குழுவினர் வரும்போது 3 மாதம் வயதுள்ள கன்று முதல் சினை, கறவை உள்ளிட்ட தங்களின் அனைத்து மாடுகளுக்கும் தவறாமல் கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி போட்டு கொடியநோய் வராமல் பாதுகாக்கலாம். இவ்வாறு அரியலூர் கலெக்டர் வினய் தெரிவித்துள்ளார்.

Tags : vaccination camp ,Ariyalur district ,
× RELATED அரியலூர் மாவட்டம் நின்னியூர் காலனி...