வேதாரண்யம், அக்.4: தேவகோட்டையில் கிராம உதவியாளர் படுகொலை செய்த சம்பவம் கண்டித்து வேதாரண்யம் தாலுகா அலுவலகம் முன்பு கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா திருவேதம்புத்தூர் கிராம உதவியாளர் ராதாகிருஷ்ணன் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்ட காரணத்திற்காக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலையை கண்டித்தும், இதில் தொடர்புடையவர்களை கைது செய்ய வலியுறுத்தி வேதாரண்யம் தாசில்தார் அலுவலகம் முன் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாகை தெற்கு மாவட்ட கிராம உதவியாளர் சங்க மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். வட்ட செயலாளர் ஆனந்த், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிறைமீட்டான் உள்ளிட்ட கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கொலை செய்யப்பட்ட கிராம உதவியாளர் ராதாகிருஷ்ணனின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்.கிராம உதவியாளர்களுக்கு உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் கிராம உதவியாளர் சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.