உடுமலை, அக். 2:உடுமலை கிழக்கு ஒன்றியம் கணக்கம்பாளையம் ஊராட்சி திமுக சார்பில், வீழ்ச்சியுற்ற தமிழினம் எழுச்சி பெற்ற வரலாறு என்ற நூல் வெளியீட்டு விழா கணக்கம்பாளையத்தில் நேற்று முன்தினம் நடந்தது. திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் சாமிநாதன் தலைமை வகித்தார். ஒன்றிய திமுக செயலாளர்கள் செல்வராஜ், புவியரசு, முருகேசன், உடுமலை நகர செயலாளர் மத்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கணக்கம்பாளையம் ஊராட்சி திமுக செயலாளர் லோகநாதன் வரவேற்றார். வரலாற்று நாயகர்கள் படத்தை முன்னாள் எம்பி., விடுதலை விரும்பி, திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் நூலை வெளியிட, ஜெயராமகிருஷ்ணன் எம்எல்ஏ, முன்னாள் நகர செயலாளர் வேலுசாமி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். நூல் தொகுப்பாசிரியர் வேலுசாமி ஏற்புரையாற்றினார். நிகழ்ச்சியில் பொள்ளாச்சி உமாபதி,
முருகேசன், நாகராஜ், செல்வராஜ், டி.நாகராஜ், சின்னசாமி, சண்முகம், பாலசுப்பிரமணியம், லதா என்ற காமாட்சி, இளங்கோவன், பாஸ்கரன், சாமிநாதன், ஆனந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.