திருப்பூர், அக்.2:ஏற்றுமதி நிறுவனங்கள் ஏற்றுமதி தரவு செயலாக்கம் மற்றும் கண்காணிப்பு அமைப்பில் (EDPMS) தங்கள் நிறுவனங்களின் முழு விவரங்களையும் தாக்கல் செய்ய டிச.31ம் தேதி வரை ரிசர்வ் வங்கி கால நீட்டிப்பு செய்துள்ளது. இது குறித்து ஆயத்த ஆடை மேம்பாட்டு கவுன்சிலின் துணைத்தலைவர் சக்திவேல் கூறியுள்ளதாவது: ‘‘ஏற்றுமதி நிறுவனங்கள் தங்களுடைய நிறுவனங்களின் விவரங்களை ஏற்றுமதி தரவு செயலாக்கம் மற்றும் கண்காணிப்பு அமைப்பில் கடந்த ஜூன் மாதம் 25ம் தேதிக்குள் பதிவு செய்ய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியது. குறுகிய நாட்களாக இருப்பதால் காலக்கெடுவை நீட்டித்து தர வேண்டுமென ரிசர்வ் வங்கிக்கு ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதை ஏற்று செப்டம்பர் 30ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டது. இந்நிலையில், ஏற்றுமதியாளர்களுக்கு எச்சரிக்கை பட்டியல் விதிகளை அமல்படுத்துவதிலிருந்து மேலும் மூன்று மாதங்களுக்கு விலக்கு அளிக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இதனை ஏற்றுமதி நிறுவனங்கள் பயன்படுத்திக்கொண்டு வரும் டிசம்பர் மாதம் 31 ம் தேதிக்குள் எச்சரிக்கை பட்டியலில் உள்ள விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.