×

பாரிமுனை லாட்ஜில் போலீசார் சோதனை: துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 10 லட்சம் லேப்டாப்கள் பறிமுதல்: வியாபாரி கைது

தண்டையார்பேட்டை: வெளிநாடுகளில் இருந்து உரிய ஆவணம் இன்றி மின்சாதன பொருட்களை கடத்தி வந்து, பாரிமுனை, மண்ணடி, பூக்கடை பகுதிகளில் பதுக்கி, பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்படுவதாக பூக்கடை காவல் துணை ஆணையர் ராஜேந்திரனுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில், வடக்கு கடற்கரை ஆய்வாளர் செங்குட்டுவன் தலைமையில் போலீசார் நேற்று மேற்கண்ட பகுதிகளில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அங்கப்ப நாயக்கன் தெருவில் உள்ள ஒரு தங்கும் விடுதி அறையில் 20க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த லேப்டாப், மின்சாதன பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

 அங்கு தங்கி இருந்த ஒருவரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், குஜராத்தை சேர்ந்த முகமது யுவனேஸ் (40), மின்சாதன பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரி என்பது தெரியவந்தது. இவர் துபாயில் இருந்து விமானம் மூலம் சென்னை வரும் பயணிகளிடம் லேப்டாப்கள், மின்சாதன பொருட்களை கொடுத்து அனுப்புவதும், சென்னைக்கு பொருட்களை கொண்டு வந்ததும், அதை பெற்று குஜராத்திற்கு கொண்டு சென்று அதிக விலைக்கு விற்பனை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.  அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட லேப்டாப், மின்சாதன பொருட்ளின் மதிப்பு ₹10 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

Tags : Dubai ,
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...