கோவை, அக்.2: கோவை இருகூர் ரயில் நிலையத்தில் பாசஞ்சர் ரயில் மற்றும் சரக்கு ரயில்கள் நிறுத்தப்படுகிறது. கோவை ஈரோடு, திருப்பூர், பாலக்காடு மார்க்கமாக செல்லும் பாசஞ்சர் ரயில்கள் இந்த ரயில் நிலையத்தில் நிறுத்தப்படுகிறது. இங்கே பிளாட்பாரம் அமைக்கப்படவில்லை. பயணிகள், ரயிலில் ஏறி இறங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். சிறார், பெரியவர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றவர்கள் உதவி இருந்தால் மட்டுமே ரயில் பெட்டியில் ஏறி இறங்க முடியும் என்ற நிலையிருக்கிறது. கடந்த 20 ஆண்டிற்கு மேலாக இங்கே பிளாட்பாரம் அமைக்க கோரிக்கை விடப்பட்டு வருகிறது. ஆனால் பிளாட்பாரம் அமைக்க ரயில்வே நிர்வாகம் முன் வரவில்லை.
ரயில் பயணிகள் கூறுகையில், ‘‘ ரயில் பாதை அருகே முட்புதர் செடி, நெரிஞ்சி முட்கள் அதிகளவு காணப்படுகிறது. இங்கே சீரமைப்பு பணிகள் கூட நடப்பதில்லை. இரவு நேரத்தில் மின் விளக்கு எரிவதில்லை. ரயில் வந்து நிற்கும் இடமும் பயணிகளுக்கு ெதரியாத நிலையிருக்கிறது. பயணிகள் உட்கார நாற்காலிகள் வசதி கிடையாது. குடிநீர் குழாய்களும் அமைக்கப்படவில்லை. புதர் சூழ்ந்த பகுதியில் திருடர்கள் நடமாட்டமும் அதிகமாகி விட்டது. சரக்கு ரயில்கள் நிறுத்த 6 ரயில் தண்டவாளம் அமைக்கபட்டிருக்கிறது. பெரிய ரயில் நிலையமாக இருந்தும், அடிப்படை வசதிகள் எதுவும் நிறைவேற்றாமல் அப்படியே விட்டு விட்டனர், ’’ என்றனர்.