×

பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, அக். 2:  4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஈரோடு ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ள பிஎஸ்என்எல் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு பிஎஸ்என்எல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்க ஈரோடு கிளை தலைவர் காளிமுத்து தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சண்முகம், ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிஎஸ்என்எல்.,க்கு 4ஜி அலைக்கற்றை ஒதுக்க வேண்டும். பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு உரிய தேதியில் ஊதியம் வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்களின் ஊதியம், மின்சார கட்டணம், வாடகை ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும்.

3வது ஊதிய மாற்றத்தை உடனே வழங்க வேண்டும். பிஎஸ்என்எல்.,ன் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த மத்திய அரசு 2000ம் ஆண்டில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். ஆட்குறைப்பு, ஓய்வுபெறும் வயதை 58 ஆக குறைக்க கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், ஓய்வூதியர் சங்க மாநில துணை செயலாளர் பரமேஸ்வரன், பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்க மாநில துணை தலைவர் மணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு பிரப் ரோட்டில் உள்ள டெலிபவன் அலுவலகத்திலும், ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள பிஎஸ்என்எல் பொதுமேலாளர் அலுவலகத்திலும் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : BSNL ,staff demonstration ,
× RELATED சாத்தான்குளம்- பண்டாரபுரம் சாலையில்...