கரூர், அக். 2: தாந்தோணிமலை நகராட்சி பகுதி கரூர் நகராட்சியுடன் இணைக்கப்பட்டு ஆண்டுகள் பல கடந்த நிலையில், வழிகாட்டி பலகைகள் இன்று வரை மாற்றப்படாமல் உள்ளது.கரூர் நகரில் கரூர், தாந்தோணிமலை, இனாம்கரூர் ஆகிய மூன்று நகராட்சிகள் இருந்தது. இதனைத் தொடர்ந்து நிர்வாக வசதிக்காக சில ஆண்டுகளுக்கு முன்பு மூன்று நகராட்சிகளுடன் சணப்பிரட்டி பஞ்சாயத்தையும் இணைத்து 48 வார்டுகளாக்கி உள்ளாட்சி தேர்தலும் நடந்து முடிந்து அதன் காலமும் முடிந்து விட்டது.ஆனால் தாந்தோணிமலை பகுதியின் பல பகுதிகளில் தாந்தோணிமலை நகராட்சியாக இருந்த போது வைக்கப்பட்ட வழிகாட்டி பலகைகள் பல மாற்றப்படாமல் பழைய நிலையிலேயே உள்ளன.
இதனால் இந்த பகுதிக்கு புதிதாக வரும் பொதுமக்கள் வழிகாட்டி பலகை ஏற்படுத்தும் குழப்பம் காரணமாக செல்ல வேண்டிய இடத்துக்கு விரைந்து செல்ல முடியாமல் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.மேலும் கரூர் நகராட்சியில் தற்போது திரும்பவும் வார்டுகள் மறுசீரமைக்கப்பட்டு வார்டுகளின் நிலை மாறியுள்ளது. எனவே மேலும் குழப்பம் வராமல் தடுக்கும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை பார்வையிட்டு, அந்தந்த இடத்தில் சரியான வழிகாட்டி பலகைகளை அமைக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.