புதுக்கோட்டை, அக்.2: நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றிபெறும் என்று திருநாவுக்கரசர் எம்பி கூறினார்.புதுக்கோட்டையில் திருநாவுக்கரசர் எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டி:மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் திரை உலகில் வெற்றியை சந்தித்தவர். தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தவர். அரசியல் பயணத்தை தொடங்கிய கமலஹாசன் மக்களிடம் ஆதரவு பெறவில்லை. தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளார். அரசியல் கட்சியை விமர்சித்தால் மேலும் அவர் தோல்வியை மட்டுமே சந்திப்பார். அரசியலில் இறங்கி விட்டதால் இதுபோன்ற விமர்சனங்களை செய்துதான் ஆகவேண்டும் என்ற கட்டாயத்திற்கு கமலஹாசன் தள்ளப்பட்டுள்ளார். மற்ற கட்சிகள் குறித்து பேசும் அளவிற்கு அவர் கட்சி வலுவான கட்சி அல்ல. தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சிகளிடம் தேர்தல் நிதி பெறுவது வாடிக்கையானது தான். அதில் ஏதும் தவறில்லை. மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு மற்றும் ஊழல் செய்து வரும் தமிழக அரசு எதிர்த்து நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் நடக்கும் இடைத்தேர்தலில் மக்கள் வாக்களிப்பார்கள். எனவே நாங்குநேரி விக்ரவாண்டி இடைத் தேர்தல்களில் திமுக கூட்டணி அபார வெற்றி பெறும்.இவ்வாறு அவர் கூறினார்.