தக்கலை, அக். 2: தக்கலை பஸ் நிலையத்தில் இரு தரப்பினர் கட்டிப்புரண்டு சண்டையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.குமரி மாவட்டத்தின் மையப்பகுதியில் உள்ள தக்கலை பஸ் நிலையம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது. இங்கிருந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு செல்ல பஸ் வசதி உள்ளது. இதனால் காலை வேளைகளில் பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வதற்கு ஏராளமானவர்கள் காத்திருப்பார்கள். குறிப்பாக மாணவிகள், பெண்கள் அதிகமாக வருவதுண்டு.இப்படி காலை, மாலை வேளைகளில் பரபரப்பாக காணப்படும் தக்கலை பஸ் நிலையத்தில் சமூக விரோதிகள், திருட்டு ஆசாமிகளின் அடாவடி செயல்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன. தகவலறிந்து சம்பவ இடம் வரும் போலீசார் அவர்களை பிடித்து சென்றால், உடனடியாக முக்கிய பிரமுகர்கள் காவல் நிலையம் சென்று மீட்டு வருவது தொடர்கதையாக உள்ளது.தக்கலை பஸ் நிலையத்தில் போலீஸ் பூத் அமைத்தும் போலீசார் பற்றாக்குறையால் நிரந்தரமாக அங்கு நிற்பதில்லை. அவ்வப்போது ரோந்து மட்டுமே வந்து செல்கின்றனர். இதனால் சமூக விரோதிகள், பிக்-பாக்கெட் ஆசாமிகளின் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை தக்கலை பஸ் நிலையத்தில் இரு தரப்பினர் கட்டிப்புரண்டு சண்டையிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.தக்கலை ராமன்பறம்பை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும், தக்கலை பஸ் நிலையம் அருகேயுள்ள கடையொன்றில் வேலை பார்க்கும் மற்றொரு வாலிபருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலை இருவரும் மினி பஸ் நிற்கும் பகுதியில் திடீரென மோதிக்கொண்டனர். இவர்களுக்கு ஆதரவாக வேறு சில வாலிபர்களும் களத்தில் குதித்தனர்.
இந்த சம்பவத்தை பார்த்த பள்ளி, கல்லுாரி மாணவிகள் அந்த பகுதியில் இருந்து ஓட்டம் பிடித்தனர். இது குறித்து தக்கலை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடம் வந்த போலீசாரிடம் 2 பேர் சிக்கினர். மற்றவர்கள் தப்பி ஓடி விட்டனர். பிடிபட்டவர்களை போலீசார் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்து வருகின்றனர்.தக்கலை பஸ் நிலையத்தில் பயணிகள் பாதுகாப்பிற்காக கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து, ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை தக்கலை சப்-டிவிஷனில் புதிதாக பொறுப்பேற்றுள்ள டிஎஸ்பி மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.