×

அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி தொகுதியில் புதிய வாக்குச்சாவடி மையங்கள் அமைப்பு

தூத்துக்குடி, அக்.2: தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் 2 வாக்குச்சாவடி மையங்களும், ஓட்டப்பிடாரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் ஒரு வாக்குச்சாவடி மையமும் பிரிக்கப்பட்டு புதிதாக வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் புதிய வாக்குச்சாவடி அமைப்பதற்கும், வாக்குச்சாவடி இடம் மாற்றம், வாக்குச்சாவடி கட்டிட மாற்றம் தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் கலெக்டர் சந்தீப் நந்தூரி, தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசுகையில்: தேர்தல் ஆணையம் 1500க்கு மேல் வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடிகளை இரண்டாக பிரித்து புதிய வாக்குச்சாவடிகளை அமைத்திட உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் நமது மாவட்டத்தில், கிராமப்புறம் மற்றும் நகர்புறங்களில் அமைந்துள்ள வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் எண்ணிக்கை 1500க்கு மேல் இருந்ததால் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் 2 வாக்குச்சாவடி மையங்களும், ஓட்டப்பிடாரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் ஒரு வாக்குச்சாவடி மையமும் பிரிக்கப்பட்டு புதிதாக வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 மேலும், 2 வாக்குச்சாவடி மையங்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் அதிகப்படியாக 281 வாக்குச்சாவடி மையங்களும், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் 257 வாக்குச்சாவடி மையங்களும் என மொத்தம் 6 சட்டமன்ற தொகுதியில் 1,596 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வருகிற 4ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன்பாக வாக்குச்சாவடி மையங்களில் தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் எழுத்துப்பூர்வமாக இன்று முதல் தெரிவிக்கலாம். பெறப்பட்ட ஆட்சேபனைகள் மீது பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி கமிஷ்னர் ஜெயசீலன், தூத்துக்குடி சப் கலெக்டர் சிம்ரான் ஜீத் சிங் காலோன், நேர்முக உதவியாளர் (பொது) (பொ) அமுதா மற்றும் அனைத்து தாசில்தார்கள், உதவி வாக்குப்பதிவு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.


Tags : Polling Centers ,constituency ,Thoothukudi ,
× RELATED கடலூரில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இறுதிக்கட்ட பயிற்சி..!!