×

நள்ளிரவு தூங்கியபோது முகத்தில் வெந்நீர் ஊற்றி கொடூரம் மாமியாரை கட்டையால் அடித்துக்கொன்ற மருமகள் செய்யாறு அருகே பயங்கரம்

செய்யாறு, அக்.2: செய்யாறு அருகே நள்ளிரவு தூங்கியபோது முகத்தில் வெந்நீர் ஊற்றி மாமியாரை அடித்து கொன்ற மருமகள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா, அரசாணை பாளையம் ஊராட்சிக்குட்பட்ட சித்தாலபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி முனியம்மாள்(55). இவர்களது மகன் வெங்கடேசன். இவர் கல்குவாரியில் வேலை செய்து வருகிறார்.இவரது மனைவி ஜோதி(35). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தந்தை இறந்த பிறகு வெங்கடேசன் அதேபகுதியில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசிக்கிறார். முனியம்மாள் மட்டும் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் திருமணம் ஆன சில நாட்களில் இருந்தே மருமகள் ஜோதிக்கும், மாமியார் முனியம்மாளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதுதொடர்பாக இருவரும் அவ்வப்போது தூசி போலீசில் புகார் செய்து உள்ளனர். அவர்களை, போலீசார் சமாதானம் செய்து வந்தனர். இருப்பினும் தொடர்ந்து தகராறு நடந்து வந்ததாம்.
அதேபோல், கடந்த 29ம் தேதி விவசாய நிலத்தில் மாடு கட்டுவது தொடர்பாக முனியம்மாளுக்கும், ஜோதிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த தகராறு நேற்று முன்தினமும் நீடித்தது. இதைப்பார்த்த அக்கம், பக்கத்தினர் மற்றும் உறவினர்கள், இருவரையும் சமாதானம் செய்தனர்.

இந்நிலையில், ஜோதி அவரது தந்தை ஏழுமலை(65), தாயார் கன்னியம்மாள்(60) மற்றும் தம்பி விநாயகம்(32) ஆகியோரிடம் முனியம்மாள் தன்னை வாழவிடாமல் அடிக்கடி தகராறு செய்வதாக கூறி கதறி அழுதார். இதையடுத்து, முனியம்மாள் உயிரோடு இருந்தால் உன்னை நிம்மதியாக வாழவிடமாட்டார் என்று கூறி முனியம்மாளை கொலை செய்ய திட்டமிட்டார்களாம்.இதையடுத்து, சண்டை நடந்த அன்று இரவு வெங்கடேசன் மற்றும் குழந்தைகளுடன் சாப்பிட்டுவிட்டு தூங்கினர். ஆனால், ஜோதி தூங்காமல் அவரது தந்தை, தாய் மற்றும் தம்பி வருகைக்காக காத்திருந்தார். பின்னர், அவர்கள் 4 பேரும் சேர்ந்து நள்ளிரவு 12.30 மணியளவில் வீட்டில் வெந்நீர் வைத்து எடுத்துக்கொண்டு மாமியார் முனியம்மாள் வீட்டிற்கு சென்றனர். அங்கு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த முனியம்மாள் முகத்தில் வெந்நீரை ஊற்றினர். இதனால், முனியம்மாள் வலியால் அலறி துடித்தார். மேலும், ஆத்திரமடைந்த ஜோதி, ஏழுமலை, கன்னியம்மாள் மற்றும் விநாயகம் ஆகியோர் சேர்ந்து அங்கிருந்த விறகு கட்டையால் முனியம்மாளை சரமாரியாக தாக்கி உள்ளனர்.
இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த முனியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர், அவர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியே வந்து அவ்வழியாக கல் குவாரியில் இருந்து வந்த ஒரு லாரியில் ஏறி காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே கம்மராஜபுரத்தில் உள்ள தங்களது வீட்டிற்கு சென்றுவிட்டனர்.

இதற்கிடையில் முனியம்மாள் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் தூசி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் ஷாகின், சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் நேற்று அதிகாலை 1 மணியளவில் சம்பவ இடத்திற்கு சென்று முனியம்மாளின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிந்து ஜோதி, அவரது தாய் கன்னியம்மாள் மற்றும் தம்பி விநாயகத்தை நேற்று அதிகாலை 3.30 மணியளவில் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள ஏழுமலையை போலீசார் தேடி வருகின்றனர்.குடும்ப தகராறில் மாமியார் முகத்தில் மருமகள் குடும்பத்தினர் வெந்நீர் ஊற்றி, விறகு கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags : daughter-in-law ,mother-in-law ,
× RELATED 9 ஆண்டுக்கு முன் இறந்த தொழிலதிபரின்...