×

நாட்றம்பள்ளி அருகே ஏற்கனவே வழங்கிய இடங்களுக்கு வேறுபெயர்களில் மீண்டும் பட்டா வழங்கியதை கண்டித்து தீக்குளிக்க முயற்சி சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

நாட்றம்பள்ளி, அக்.2: நாட்றம்பள்ளி அருகே ஏற்கனவே பட்டா வழங்கப்பட்ட 16 பேரின் இடங்களுக்கு மீண்டும் வேறு நபர்கள் பெயரில் பட்டா வழங்கிய தாசில்தாரை கண்டித்து பொதுமக்கள் நேற்று தீக்குளிக்க முயற்சி மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம், நாட்றம்பள்ளி தாலுகாவில் கீழ்பந்தாரப்பள்ளி ஊராட்சி உள்ளது. இங்குள்ள ஒரு பிரிவை சேர்ந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசு சார்பில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 76 வீட்டுமனைகள் அமைக்கப்பட்டு, தகுதியுள்ள 48 பேருக்கு கடந்த 2008ம் ஆண்டு பட்டா வழங்கப்பட்டது. அதன் பின்னர் மீண்டும் கடந்த ஜனவரி மாதம் 16 பேர் என மொத்தம் 64 பேருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் மேலும் 16 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது. ஜனவரி மாதம் 16 பேருக்கு வழங்கிய அதே வீட்டு மனை எண் கொண்ட பட்டா மீண்டும் பிப்ரவரி மாதம் வேறு பெயர்களில் 16 பேருக்கு வழங்கப்பட்டு உள்ளது.இந்நிலையில், பிப்ரவரி மாதம் பட்டா பெற்ற 3 பேர், தங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில் வீடு கட்டியுள்ளனர். இதையறிந்து ஜனவரி மாதம் பட்டா பெற்ற சிலர், அங்கு வந்து வீடு கட்டுவதை தடுத்து இந்த இடம் எங்களுக்கு சொந்தமானது, தங்களுக்கு தான் பட்டா வழங்கியுள்ளனர் என தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த முதலில் பட்டா பெற்றவர்கள் இதுகுறித்து திருப்பத்தூர் ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் குமரேசனிடம் முறையிட்டனர். அப்போது அவர் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதற்கிடையில் அந்த இடத்தில் 3 பேர் வீடு கட்டுமான பணியை மேற்கொண்டு வருகின்றனர்.இதனால் ஆத்திரமடைந்த 16 குடும்பத்தினர் நேற்று நாட்றம்பள்ளி- திருப்பத்தூர் சாலை கே.பந்தாரப்பள்ளி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அவ்வழியாக வந்த வாகனங்களையும் சிறைபிடித்தனர். தகவலறிந்த தனி தாசில்தார் குமரேசன், நாட்றம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் சமரசம் செய்தனர். அப்போது அங்கு மறியலில் ஈடுபட்ட கூலித்தொழிலாளி மணி(45) என்பவர் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைக்கண்ட போலீசார் மண்ணெண்ணெய் கேனை அவரிடமிருந்து பறித்தனர்.

அப்போது பொதுமக்கள் தனி தாசில்தார் குமரேசனை பார்த்து, எங்களுக்கு பட்டா வழங்கிவிட்டு அதே மனையை மறு மாதம் வேறு நபர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு பட்டா போட்டு கொடுத்துள்ளீர்கள்’ என குற்றம் சாட்டினர். அப்போது அங்கு வந்த நாட்றம்பள்ளி தாசில்தார் உமாரம்யா, இதுகுறித்து குமரேசனிடம் விசாரித்தார்.இதற்கு தனி தாசில்தார் குமரேசன், இதுகுறித்து டிஆர்ஓவிடம் பேசி வரும் 18ம் தேதிக்குள் இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : re-issuing ,places ,Nadrampalli ,
× RELATED தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு ஓரிரு...