×

நடுரோட்டில் 2 போலீசாரை புரட்டியெடுத்த ரவுடிகள்

வில்லியனூர், அக். 1: புதுவை வில்லியனூர் அடுத்த கரிக்கலாம்பாக்கத்தில் ரவுடி பட்டியலில் உள்ள  நபரின் விபரங்களை சேகரிக்க சென்ற 2 போலீசாரை நடுரோட்டில் போட்டு ரவுடிகள் புரட்டியெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வில்லியனூர் காவல் சரகத்தின் கீழ் கரிக்கலாம்பாக்கம் துணை காவல் நிலையம் இயங்கி வருகிறது. இந்த காவல் நிலையத்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ரவுடிகளின் விபரங்கள் குறித்து போலீசார் கணக்கெடுத்து, ரவுடிகளின் செயல்பாடுகளுக்கு தகுந்தவாறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.இந்நிலையில் கரிக்கலாம்பாக்கம் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த ரவுடி ஜோசப் மற்றும் ரோஸ் அய்யனார் ஆகியோரின் செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்த விபரங்களை சேகரிப்பதற்காக மைக்கேல், சிவகுரு ஆகிய 2 போலீசார் பைக்கில் நேற்று இரவு சுமார் 7.30 மணியளவில் சென்றனர். முதலில் ரவுடி ஜோசப் வீட்டிற்கு சென்று, அவரது  விபரங்கள் குறித்து கேட்டனர்.
அப்போது மேலதிகாரிக்கு தகவல் கொடுப்பதற்காக ஜோசப்பை, அவரது வீட்டுடன் சேர்த்து போலீசார் செல்போனில் படம் எடுத்துள்ளனர்.  இதனால் ஆவேசமடைந்த ஜோசப், அவரது தம்பி அருணாசலம் மற்றும் ரோஸ் அய்யனார் ஆகிய 3 ரவுகளும்  சேர்ந்து போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போலீசார் ஜோசப்பை பைக்கில் ஏற்ற முயற்சித்தனர். அப்போது ரவுடிகள் 3 பேரும் சேர்ந்து 2 போலீசாரையும் சரமாரியாக தாக்கினர். அவர்கள் தொடர்ந்து தாக்கியதால், போலீசார் உடனே தங்கள் செல்போன் மூலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இருந்தபோதும் அவர்களை நடுரோட்டில் போட்டு ரவுடிகள் புரட்டி எடுத்தனர். பின்னர் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இதில் பலத்த காயமடைந்த போலீசார் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் அளித்த புகாரின் பேரில் ரவுடிகள் ஜோசப், ரோஸ் அய்யனார், அருணாச்சலம் ஆகியோர் மீது கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர். பொதுஇடத்தில் 2 போலீசாரை ரவுடிகள் சரமாரியாக தாக்கிய சம்பவம் புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதனை அவ்வழியாக சென்றவர்கள் செல்போனில் வீடியோ எடுத்தனர். இது நேற்றிரவு சமூகவலைதளங்களில் வைரலானது.

Tags : policemen ,middle ,road ,
× RELATED காட்டுமாடு முட்டி விவசாயி படுகாயம்