புதுச்சேரி, அக். 1: மகாத்மாகாந்தியின் 150வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு அக்கட்சியின் புதுச்சேரி மாநில தலைவர் நமச்சிவாயம் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய தேசத்தின் சுதந்திரம் பெற்றுத்தர தன்னையே முழுமையாக அர்ப்பணித்து கொண்ட தியாக செம்மல் தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் 150வது பிறந்தநாள் விழா நாளை (2ம்தேதி) புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி சார்பில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.150வது பிறந்தநாள் விழாவை போற்றும் வகையில், புதுச்சேரி நகரம் முழுவதும் மாபெரும் பாதயாத்திரை நடைபெறுகிறது. இந்த யாத்திரை காந்தி சிலையில் இருந்து காலை 8 மணிக்கு துவங்கி எஸ்பி பட்டேல் சாலை, அண்ணாசாலை, ராஜா தியேட்டர், அண்ணா சதுக்கம், பழைய பேருந்து நிலையம், சுப்பையா சாலை வழியாக காந்தி சிலையை மீண்டும் வந்தடைகிறது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காந்தியடிகள் உருவப்படம் தாங்கிய அலங்கார வண்டி அணி வகுத்து வருகிறது. தேசப்பக்தி பாடல்கள் பாதயாத்திரை முழுவதும் இசைக்கப்படுகிறது. இந்த நிகழ்வில் புதுச்சேரி மேலிடப்பொறுப்பாளர் சஞ்சய்தத், முதல்வர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்பி, அமைச்சர்கள், சபாநாயகர், சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவுள்ளனர். மகாத்மாவுக்கு மங்காத புகழும் பெருமையும் சேர்க்க நடைபெற இருக்கின்ற, அமைதி யாத்திரையில் அனைத்து பிரிவு நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளாக கலந்து கொள்ளுமாறு காங்கிரஸ் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.