அருப்புக்கோட்டை, அக். 1: அருப்புக்கோட்டையில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 28 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை இ.பி.காலனி காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் அசோகன். தனியார் மருந்து கம்பெனி விற்பனை பிரதிநிதி. நேற்று முன்தினம் காலை அசோகன் பணிக்கு சென்றுவிட்டார். வீட்டிலிருந்த அவரது மனைவி மற்றும் அவரது மகள் தீபாவளிக்கு புதிய ஜவுளி வாங்கச் சென்றனர்.அசோகன் பணி முடிந்து இரவில் வீடு திரும்பினர். அப்போது அவரது மனைவியும், மகளும் ஜவுளி எடுத்துக் கொண்டு திரும்பினர். வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவை உடைத்து அதில் இருந்த 28 பவுன் நகை, 5 ஆயிரம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது. பின்பக்க கதவை உடைத்து கொள்ளையர்கள் வீட்டிற்குள் புகுந்ததும் தெரிய வந்தது.இது குறித்த புகாரின்பேரில், அருப்புக்கோட்டை நகர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.