திருமங்கலம், நவ.1: கப்பலூரிலுள்ள மதுரை தெற்கு மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தில் நேற்று நடந்த பார் டெண்டரில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுடன் இணைந்து பார்கள் செயல்படுகின்றன. மதுரை மாவட்டத்தில் மதுரை வடக்கு மற்றும் மதுரை தெற்கு ஆகிய இரண்டு டாஸ்மாக் மாவட்ட அலுவலகங்கள் செயல்படுகின்றன. தெற்கு மாவட்ட அலுவலகம் திருமங்கலத்தை அடுத்துள்ள கப்பலூரில் இயங்குகிறது. இந்த டாஸ்மாக் மாவட்ட நிர்வாகத்தின் கீழ், மதுரை மேற்கு, சோழவந்தான், திருமங்கலம், திருப்பங்குன்றம், கள்ளிக்குடி, பேரையூர் தாலூகாக்களை சேர்ந்த 150 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளின் பார்களுக்கான ஓபன் டெண்டர் நேற்று நடந்தது. விண்ணப்ப படிவங்களை பெற்றவர்கள் நேற்று மதியம் 2 மணிவரையில் படிவங்களை பெட்டிகளில் போடலாம் என அறிவிக்கப்பட்டிருந்ததால் ஏராளமானோர் நேற்று மதியம் வரையில் பூர்த்தி செய்த படிவங்கள் மற்றும் ஏலத்தொகையை குறித்து பெட்டியில் போட்டினர்.
ஓப்பன் டெண்டர் மாலை 3 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், மாலை 3.30 மணிக்கு துவங்கியது. தெற்கு மாவட்ட மேலாளர் சரவணன் டெண்டரை நடத்தினார். பார் டெண்டரை அடுத்து கப்பலூர் டாஸ்மாக் அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். மாலை 3.30 மணிக்கு துவங்கிய பார் டெண்டர் இரவு வரை தொடர்ந்து நடந்தது. அதிமுக மற்றும் அமமுகவினர் பலரும் இந்த டெண்டரில் கலந்து கொண்டனர்.