சேலம், அக்.1: மருத்துவம் சார்ந்த சட்டப் பிரச்னைகளும் மற்றும் மருத்துவத் தீர்ப்பாயத்தின் தேவையும் என்ற தலைப்பில், தேசிய அளவிலான ஆய்வரங்கம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் நடந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான விடுதலை தலைமையில் நடந்த ஆய்வரங்கின் நிறைவு விழாவில், டாக்டர் சென்னை எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக உயர் சிறப்புநிலைப் பேராசிரியர் டாக்டர் சொக்கலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில், பேராசிரியர் டாக்டர் சொக்கலிங்கம், மூத்த வழக்கறிஞருர் விடுதலை ஆகியோர் பேசுகையில், ‘நாளுக்குநாள் அதிகரித்து வரும் மருத்துவ வழக்குகளை சரியான முறையில் தீர்வு காண மருத்துவத் தீர்ப்பாயம் அமைக்கப்பட வேண்டியது அவசியம்.
மருத்துவ கவனக் குறைவுகளே மருத்துவ வழக்குகள் அதிகரித்து வருவதற்கு காரணமாகிறது. மருத்துவர்கள் மருத்துவ அறிவு, தொழில்திறமை ஆகியவற்றை பெற்றிருந்தால் மருத்துவ வழக்குகளை பெரும்பாலும் தவிர்த்துவிட முடியும்,’ என்றனர். நிகழ்ச்சியில், கேளம்பாக்கம் செட்டிநாடு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல்வர் சாந்தகுமார், சென்னை காவேரி மருத்துவமனை மாரடைப்பு மற்றும் நரம்பியல் துறை, மருத்துவர் சிவராஜன் தண்டேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கல்லூரி செயலாளர் சரவணன் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை கல்லூரி தலைமை நிர்வாக அதிகாரி மாணிக்கம் செய்திருந்தார்.