போச்சம்பள்ளி, அக்.1: போச்சம்பள்ளியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று காலை-மாலை வேளைகளில் யோகா பயிற்சி செய்தனர். மேலும், காவல் நிலைய வளாகத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டனர். தாலுகா அலுவலக சுவற்றுக்கு சுண்ணாம்பு அடித்தனர். பள்ளி வளாகத்தில் குவிந்து கிடந்த குப்பை கழிவுகளை மொத்தமாக கூட்டி அப்புறப்படுத்தினர். தொடர்ந்து மரக்கன்றுகளை நட்டனர். புற்றுநோய் தடுப்பு, மழைநீர் சேகரிப்பு குறித்தும், டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பது குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
முன்னதாக நடைபெற்ற தொடக்க விழாவிற்கு தலைமை ஆசிரியர் சரஸ்வதி தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தமூர்த்தி, பிடிஏ முன்னாள் தலைவர் செந்தில்சண்முகம், ராமமூர்த்தி, சிவப்பிரகாசம், பிடிஏ தலைவர் பழனி முன்னிலை வகித்தனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் அம்சவள்ளி வரவேற்றார். கணினி பயிற்றுனர் முத்துக்குமார், காவல் ஆய்வாளர் கமலேசன், அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் தனலட்சுமி, ஆகியோர் கலந்து கொண்டு பேசினார். உதவித் திட்ட அலுவலர் ராமேஸ்வரி நன்றி கூறினார். முகாமில் அனைத்து பெற்றோர் மற்றும் மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.