×

மனைவி தற்கொலை வழக்கில் கணவருக்கு 2 ஆண்டு சிறை

ஈரோடு, அக்.1:   மனைவி தற்கொலை செய்த வழக்கில் கணவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு மகிளா கோர்ட் நேற்று தீர்ப்பளித்தது. ஈரோடு மாவட்டம் எலத்தூர் தெற்கு பகுதியை சேர்ந்த முத்துசாமி மகன் ஈஸ்வரமூர்த்தி (29). இவர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை செய்தார். அதே மில்லில் சூப்பர்வைசராக கோபிசெட்டிபாளையம் அருகே கோசணம் சங்கம்பாளையத்தை சேர்ந்த ராமசாமியின் மகள் சுகன்யா என்கிற சுகுமாரி (27) என்பவர் வேலை செய்தார். இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர்.
பெற்றோர் சம்மதத்துடன் ஈஸ்வரமூர்த்தியும், சுகன்யாவும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு நிபாஷ் (4) என்ற மகன் உள்ளார். கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி ஈஸ்வரமூர்த்தியின் உறவினர் ஒருவர் இறந்துவிட்டார்.

இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக ஈஸ்வரமூர்த்தி, சுகன்யாவை அழைத்துள்ளார். ஆனால், சுகன்யா வர மறுத்து விட்டார். இதில் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், ஈஸ்வரமூர்த்தி சுகன்யாகவை தாக்கியுள்ளார்.  இதில் மனமுடைந்த சுகன்யா மறுநாள் அதிகாலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஈஸ்வரமூர்த்தியை கைது செய்தனர்.   இந்த வழக்கு விசாரணை ஈரோடு மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று வழக்கின் இறுதி விசாரணையை முடித்து, நீதிபதி மாலதி நேற்று தீர்ப்பளித்தார். அதில்,ஈஸ்வரமூர்த்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதம் விதித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் சுமதி ஆஜரானார்.

Tags :
× RELATED அமைச்சர் முன்னிலையில் பாஜவினர் 100 பேர்...