×

திம்பம் மலைப்பாதையில் வேன் மோதி மின்கம்பம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

சத்தியமங்கலம், அக். 1:   சத்தியமங்கலம் -  மைசூர் சாலையில் ஆசனூர் அருகே மின் கம்பத்தின் மீது வேன் மோதி கம்பம்  சாலையில் விழுந்ததால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது.  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் தேசிய  நெடுஞ்சாலையில் தமிழக - கர்நாடக மாநிலங்களுக்கிடையே 24 மணி நேரமும்  போக்குவரத்து நடந்து வருகிறது. இந்நிலையில் சத்தியமங்கலம் -  மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திம்பம் மலைப்பகுதியில் கடந்த சில  நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நேற்று காலை முதல்  கடுமையான பனி மூட்டம் ஏற்பட்டது. இதனால் மலைப் பாதையில் செல்லும் வாகனங்கள்  மஞ்சள் நிற முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாக ஊர்ந்து சென்றன.

நேற்று காலை சாலையில் சென்ற  வேன் பனி மூட்டம் காரணமாக நிலை தடுமாறி  ஆசனூர் அருகே சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தின் மீது மோதியது. இதில்  மின்கம்பம் சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் சாலையில் சென்ற  வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன.  இதுகுறித்து தகவல் அறிந்த  மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சாலையில் விழுந்த  மின்கம்பத்தை அகற்றினர். இதன் காரணமாக சத்தியமங்கலம்- மைசூர் தேசிய  நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags : mountain road ,
× RELATED டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து விபத்து...