பெ.நா.பாளையம், அக்.1: கோவை சின்னதடாகம் பகுதியை சுற்றியுள்ள செங்கல் தொழிலாளர்கள் எம்பி நடராஜனிடம் செங்கல் தொழிலை பாதுகாக்ககோரி மனு அளித்தனர். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக கோவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் நடராஜன். இவர், நேற்று பெரியநாயக்கான்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். சின்னத்தடாகம் அருகே உள்ள சோமயனூருக்கு வந்த போது ஊராட்சியின் முன்னாள் தலைவர் சுந்தர்ராஜன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட செங்கல் தொழிலர்ளர்கள் எம்பி நடராஜனிடம் மனு அளித்தனர்.
அதில், 50 ஆண்டுகளுக்கும் மேல் தடாகத்தை சுற்றியுள்ள செங்கல் தயாரிக்கும் பணியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறோம்.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக ஒரு சில சமூக விரோதிகள் தமிழக அரசுக்கு பொய்யான தகவலை கொடுத்து அரசு அதிகாரிகளையும், பொதுமக்களையும் குழப்பி வருகின்றனர். இதனால், செங்கல் உற்பத்தி சார்ந்த தொழில் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே. பொய்யான தகவல் கொடுப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து செங்கல் தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளனர். மனுவை பெற்றுக் கொண்ட அவர், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக எம்பி நடராஜன் உறுதி அளித்தார்.