தொண்டாமுத்தூர், அக்.1: பேரூர் பட்டீஸ்வரர் கோயிலுக்கு கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். ேகாவை அருகே உள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோயில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின்கீழ் உள்ளது. இக் கோயில் செயல் அலுவலர் பொறுப்பில் இயங்கி வந்தது. அதன்பின், 1998ம் ஆண்டு முதல் கோயில் நிர்வாகத்தை கண்காணிப்பதற்கு உதவி ஆணையர் ரேங்கில் தரம் உயர்த்தப்பட்டது. 2011ம் ஆண்டு இக்கோயிலுக்கான உதவி ஆணையராக கிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். ஆனால், கடந்த 8 ஆண்டுகளாக கோயிலில் கண்காணிப்பாளர் பதவி நிரப்பப்படாமல் இருந்தது.
இதனால், கோயிலுக்கு சொந்தமான நில வரி வசூல், கடையை ஏலம் விடுதல், குத்தகை பாக்கி வசூல் போன்ற பணிகளில் தொய்வு ஏற்பட்டது.
இதனால், கண்காணிப்பாளர் பணியிடத்தை உடனடியாக நிரப்ப வேண்டும் என சிவபக்தர்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது. இந்நிலையில், தீர்த்தமலை கோயிலில் கண்காணிப்பாளராக பொறுப்பு வகித்து வந்த பிரபு, பேரூர் கோயில் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டு அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.