ஈரோடு, அக். 1: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனுடையோர் நலச்சங்கம் சார்பில், 82 பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட பட்டாவிற்கு, இடம் வழங்க வேண்டும். அரசு பஸ்களில் மாற்றுத்திறனாளிகள் கட்டண சலுகையில் செல்வோர்களிடம் நடத்துனர்கள் கனிவாக நடந்து கொள்ளவதை உறுதி செய்ய வேண்டும். ஸ்மார்ட் கார்டு வடிவிலான அடையாள அட்டை வழங்க வேண்டும். பழுதடைந்த மாற்றுத்திறனாளிகள் கழிவறையை சீரமைக்க வேண்டும். பஸ் ஸ்டாண்டில் மாற்றுத்திறனாளிகள் வாகனங்களை நிறுத்த இட வசதி மற்றும் மாநகரில் நடந்து திட்ட பணிகளால் சாலைகளில் மாற்றுத்திறனாளிகள் வாகனங்கள் ஓட்ட முடியாத நிலை உள்ளது.
அதனை விரைவாக சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு கலெக்டர் அலுவலகம் வளாகத்தில் நேற்று (30ம் தேதி) தர்ணா போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இதுதொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் (டிஆர்ஓ) கவிதா, மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க தலைவர் துரைராஜ் மற்றும் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், 15 நாட்களுக்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என டி.ஆர்.ஓ., கவிதா உறுதி அளித்தார். இதயைடுத்து நேற்று நடக்க இருந்த தர்ணா போராட்டத்தை வாபஸ் பெற்று விட்டதாக அச்சங்க தலைவர் துரைராஜ் தெரிவித்தார்.