×

காக்களூர் தொழிற்சாலை கழிவுநீர் தண்ணீர்குளம் ஏரியில் கலப்பு : கலெக்டரிடம் மக்கள் மனு

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த காக்களூர் தொழிற்பேட்டையில் இருந்து வெளியேறும் கழிவுநீர்,  தண்ணீர்குளம் ஏரியில் கலப்பதை தடுத்து நிறுத்த நடவடிக்கை வேண்டும் என  அப்பகுதி மக்கள் முன்னாள் ஊராட்சி தலைவர்கள் டி.டி.தயாளன், சம்பந்த ரெட்டி ஆகியோர் தலைமையில் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் மனு கொடுத்தனர். திருவள்ளூர் அடுத்த காக்களூரில், கடந்த 1989ம் ஆண்டு தொழிற்பேட்டையின் முதல் பிரிவும், 2008ம் ஆண்டு இரண்டாவது பிரிவும் துவங்கப்பட்டன. 283 ஏக்கரில் அமைந்துள்ள இந்த தொழிற்பேட்டையில், தற்போது 142 தொழிற்சாலைகள் உள்ளன. இத்தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளின் கழிவு நீர் திறந்தவெளியில் சாலையோரம் வெளியேற்றப்படுகிறது. இது, மழைநீர் செல்வதற்கென அமைக்கப்பட்ட கால்வாய் வழியாக செல்கிறது. இந்த கழிவுநீர் சிகப்பு நிறத்தில் வெளியேறி நீர்வரத்து கால்வாய் வழியாக சென்று தண்ணீர்குளம் ஏரியில் கலக்கிறது.

தண்ணீர்குளம் ஏரியை நம்பி, 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது நிலத்தில் பயிரிட்டு உள்ளனர். இங்கிருந்து போர்வெல் மூலம் அருகில் உள்ள கிராமங்களுக்கு குடிநீரும் அனுப்பப்படுகிறது. மேலும், ஏரியில் ஆடு, மாடுகளையும் விவசாயிகள் மேய்த்து வருகின்றனர். இந்நிலையில், காக்களூர் தொழிற்சாலைகளின் கழிவு நீர் ஏரியில் கலப்பதால், ஏரியின் தண்ணீரை அருந்தும் கால்நடைகள் பாதிக்கப்படுகிறது. நிலத்தடிநீர் மாசுபட்டு வருவதால் விவசாயிகளும் ஏரியின் நீரை விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி நிற்கின்றன. அதோடு வரத்து கால்வாயில் குப்பைக் கழிவுகள், கோழிக்கழிவுகள், கட்டுமான கழிவுகள் அதிகளவில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் துர்நாற்றம் வீசி வருகின்றன.

எனவே, காக்களூர் தொழிற்பேட்டையின் கழிவுநீர், தண்ணீர்குளம் ஏரிக்குள் சென்று கலப்பதை தடுத்துநிறுத்தி, ஏரியை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு மனுவில் உள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் இம்மனுமீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது கிராம பிரமுகர்கள் ஆர்.சத்தியமூர்த்தி, வீரபத்திரன், எல்லப்பன், சுபாஷ், பீட்டர், கவுதமன் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags : Lake ,Kakkalur Industrial Wastewater Treatment Compound ,Collector ,
× RELATED செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்இருப்பு...