×

ஊத்துக்கோட்டை அருகே கிருஷ்ணா கால்வாயில் ஆபத்தை உணராமல் குளிக்கும் சிறுவர்கள் : தடைசெய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

ஊத்துக்கோட்டை, அக்.1: ஊத்துக்கோட்டை அருகே கிருஷ்ணா கால்வாயில் ஆபத்தை உணராமல் சிறுவர்கள் குளிப்பதை தடை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு கங்கா நதிநீர் ஒப்பந்தப்படி 12 டிஎம்சி தண்ணீர் ஆந்திர அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டும். அதன்படி, ஆந்திர அரசு, கண்டலேறு அணையில் இருந்து கடந்த 25ம் தேதி காலை வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறந்தது. பின்னர் 2 ஆயிரம் கனஅடியாக உயர்த்தியது. 6 நாட்களில் தமிழக எல்லைக்கு வரவேண்டிய தண்ணீர், ஏற்கனவே மழை பெய்து கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் தேங்கி கிடந்ததால் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்டிற்கு 4வது நாளான 28ம் தேதி காலை 10.30 மணிக்கு வந்தது. தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்டில் தற்போது 750 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்ட் பகுதியிலும், ஜீரோ பாயின்டிற்கும் - ஆந்திர மாநிலம் சத்தியவேடுவிற்கும் இடையில் பூதூர் என்ற இடத்தில் கிருஷ்ணா கால்வாயில் செல்லும் தண்ணீரில் ஆபத்தை உணராமல் சிறுவர்கள், மாணவர்கள் டைவ் அடித்து குளித்து வருகின்றனர்.
கிருஷ்ணா கால்வாய் தண்ணீரில் மாணவர்கள் குளிப்பதால் நீர் மாசுபடுவது மட்டுமல்லாமல், அவர்களின் உயிருக்கு ஆபத்தாகக் கூட முடியலாம். ஏனென்றால் கால்வாயில் செல்லும் தண்ணீர் மேலோட்டமாக பார்க்கும் போது நிதானமாக செல்வது போல்தான் தெரியும். ஆனால் கீழ் பகுதியில் தண்ணீரின் அளவு அதிவேகமாக சுழன்று, சுழன்று செல்லும். இந்த சுளர்ச்சியில் குளிக்கும் சிறுவர்கள் சிக்கிக்கொண்டால் உயிருக்கு ஆபத்தாக முடியும்.
எனவே சிறுவர்கள் குளிப்பதை தடை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Children ,Krishna Canal ,Uthukottai ,
× RELATED 1.25 கோடி குழந்தைகள் உடல் பருமனால்...