×

மாதவரம் மேம்பாலம் அருகே உள்ள சிஎம்டிஏ வாகன நிறுத்த மைய சாலையில் மரண பள்ளங்கள்

திருவொற்றியூர்: மாதவரம் மேம்பாலம் அருகே உள்ள சிஎம்டிஏ வாகன நிறுத்த மைய சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் விபத்தில் அபாயம் உள்ளது. மாதவரம் மேம்பாலம் அருகே சிஎம்டிஏ வாகன நிறுத்த மையம் உள்ளது. இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட லாரி டிரான்ஸ்போர்ட் அலுவலகங்கள் செயல்படுவதோடு, நூற்றுக்கணக்கான லாரிகள் நிறுத்தப்படுகின்றன. இந்நிலையில் இந்த வாகன நிறுத்த மையத்தில் உள்ள சாலை சிதிலமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அதிக பாரங்களை ஏற்றி வரும் லாரிகள் இந்த சாலையில் சீராக செல்ல சிரமப்படுவதோடு, மேடான பகுதியில் கார்கள் ஏறி இறங்கும்போது, பள்ளத்தில் சிக்கி பழுதாகி விடுகின்றன. அதுமட்டுமன்றி இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் சாலை பள்ளத்தில் தடுமாறி விழுந்து காயமடைந்தனர்.

கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், சாலையில் உள்ள ராட்சத பள்ளங்களில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. இதனால், இரவு நேரங்களில் அவ்வழியே செல்வோர், இந்த பள்ளத்தில் தடுமாறி விழுந்து செல்கின்றனர். இதுகுறித்து லாரி டிரைவர்கள் கூறுகையில், ‘‘இந்த வாகன நிறுத்த மையத்தில் மழைநீர் கால்வாய் சரியாக பராமரிக்காததால், பல இடங்களில் குப்பை சேர்ந்து, மழைநீர் செல்ல முடியாமல் சாலையிலேயே தேங்கி நிற்கிறது. அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாயை ஈட்டித் தரும் இந்த வாகன நிறுத்த மையத்தில் சாலை, குடிநீர், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகளை சிஎம்டிஏ நிர்வாகம் செய்து தருவதில்லை. இதுபற்றி பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,’’ என்றனர்.

Tags : CMDA Parking Center Road ,Madhavaram Bridge ,
× RELATED மாதவரம் மேம்பாலம் அருகே உள்ள சிஎம்டிஏ...