திருமயம், அக்.1: திருமயம் அருகே போக்குவரத்துக்கு முற்றிலும் பயன்படுத்த முடியாத பனையப்பட் டி- கூடலூர் சாலையை உடனே சரிசெய்ய வேண்டும் என அப்பகுதி கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள பனையப்பட்டியில் இருந்து கூடலூர் வழியாகசெல்லும் சுமார் 8 கிலோ மீட்டர் சாலை திருமயம், பொன்னமராவதி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் சென்று பொன்னமராவதி நெடுஞ்சாலையில் இணைகிறது. இந்த சாலையை மேலப்பனையூர், கூடலூர், பழுவினிப்பட்டி உள்ளிட்ட 20 மேற்பட்ட கிராம மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் சாலை செப்பணிட்டு பலஆண்டுகள் ஆனநிலையில் தொடர் பராமரிப்பு இல்லாமல் முற்றிலும் சேதமடைந்து வாகன ஓட்டிகள் பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
கோடைகாலங்களில் தட்டுதடுமாறி சாலை கடக்கும் வாகன ஓட்டிகள் மழைகாலங்களில் மழைநீர் சாலையில் குளம் போல் தேங்கி சேறும் சகதியுமாக மாறுவதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் உள்ளிட்ட அனைவரும் சாலையை கடக்க பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனிடையே அப்பகுதியில் யாருக்கும் மருத்துவ உதவி தேவைப்படும் பட்சத்தில் நோயாளியை மருத்துவமனைக்கு கொண்டு செல்வது சவாலாக உள்ளது. இது சம்பந்தமாக பல்வேறு அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே தலையிட்டு பனையப்பட்டி-கூடலூர் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பாக உள்ளது.